Pages

Thursday, August 9, 2012

நாசாவில் சிரேஷ்ட ஆய்வுகள் விஞ்ஞானியாக இலங்கை விஞ்ஞானி


செவ்வாய்க் கிரகத்துக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவால் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது கியூரியாசிட்டி ரோவர் விண்கலம்.

இதன் மூலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை அமெரிக்கா நிலை நாட்டி உள்ளது.

அமெரிக்காவின் இந்த வெற்றியில் இலங்கை விஞ்ஞானி ஒருவருக்கும் மிக காத்திரமான பங்கு உள்ளது.

நாசாவில் சிரேஷ்ட ஆய்வுகள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகின்றார் கலாநிதி சரத் குணபால.

ரோவர் விண்கலத்தில் ஆறு பிரதான உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றுள் முக்கியமான ஒன்று டீ. எல். எப் என்கிற லேசர் உபகரணம்.

செவ்வாய்க் கிரகத்தில் மீதேன் வாயு காணப்படுகின்றதா? என்பதை ஆராய இவ்வுபகரணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

செவ்வாயில் கடந்த காலங்களில் உயிரினங்கள் வாழ்ந்தனவா? என்பதை மீதேன் வாயு தொடர்பான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.

இந்நிலையில் இவ்வுபகரணத்தை இலங்கை விஞ்ஞானி கலாநிதி சரத் குணபால தலைமையிலான நிபுணர்கள் குழுதான் வடிவமைத்துக் கொடுத்து உள்ளது.

Tuesday, August 7, 2012

‘கியூரியாசிட்டி’ விண்கலம் எங்கு இறங்க வேண்டும் என்பதை தீர்மானித்த குழுவில் இந்தியரும் ஒருவர்


செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக நாசாவால் அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம் எங்கு தரையிறங்க வேண்டும் என்பதை தீர்மானித்த குழுவில் ஒரு இந்தியரும் இடம் பெற்றுள்ளார். அவரது பெயர் அமிதாப் கோஷ்.

கியூரியாசிட்டியை எங்கு தரையிங்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தது தங்களுக்குப் பெரும் சவாலாகவும், திரில்லிங்காகவும் இருந்ததாக கோஷ் கூறியுள்ளார்.

நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின், அறிவியல் செயல்பாட்டு பணிக் குழுவின் தலைவரான கோஷ், கியூரியாசிட்டி எங்கு லேண்ட் ஆக வேண்டும் என்பதை தீர்மானிக்க அமைக்கப்பட்ட குழுவிலும் இடம் பெற்று முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் கியூரியாசிட்டி எங்கு இறங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க கூடியபோதெல்லாம் பதட்டமாகவே இருந்தோம். பெரும் கவலையாகவும் இருந்தது. இது மிக மிக கடினமான பணியாக இருந்தது.

பூமிக்கு சற்றும் அறிமுகம் இல்லாத நிலையில், முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன், அது செயல்படுமா, இல்லையா என்பதே தெரியாத நிலையில், உங்களை பூமிக்கு அனுப்பி இறங்கு என்று சொன்னால் எப்படி இருக்குமோ அதே நிலையில்தான் கியூரியாசிட்டி விண்கலமும் இருந்தது.

எனவே இந்த மிகப் பெரிய பணியை மிகவும் கவனத்துடன் கையாண்டோம். ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த உழைப்பு இது. இது மட்டும் தோல்வி அடைந்திருந்தால், அவ்வளவுதான், எல்லாமே முடிந்து போயிருக்கும். மறுபடியும் செவ்வாயைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாமல் போயிருக்கும் என்றார் அவர்.

பூமியிலிருந்து கிட்டத்தட்ட 570 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது கியூரியாசிட்டி. அது இறங்கிய இடத்தை முதலில் தேர்வு செய்ய ஆராய்ச்சிகள் நடந்தபோது மெளன்ட் ஷேப் என்ற செவ்வாய் கிரக மலைக்குன்று உள்ள பகுதியில்தான் விண்கலத்தை தரையிறக்க நல்ல இடம் என்று முடிவுக்கு வரப்பட்டது. அந்தப் பகுதியில் ஈரப்பதம் இருப்பதையும் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் ஆய்வுக்கு இந்த மலைக்குன்று அருகே உள்ள கேல் கிரேட்டர் பகுதிதான் சரியானது என்ற தீர்மானத்திற்கும் வந்தனர்.

கியூரியாசிட்டி இறங்கியுள்ள பகுதியில் களிமண் இருப்பதாகவும், அங்கு சல்பேட் தாது நிறைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கியூரியாசிட்டி விண்கலம் தனது முதல் முக்கியப் பணியாக மெளன்ட் ஷேப் மலைக்குன்றுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. அதில் கிடைக்கப் போகும் தகவல்கள் ஒவ்வொன்றும் திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Monday, August 6, 2012

மனித குலத்தின் மிகப் பெரிய மைல் கல் சாதனை

 மனிதனின் மாபெரும் அறிவியல் சாதனைகளில் மற்றும் ஒன்று இன்று அரங்கேறியுள்ளது. பூமியில் அல்ல – நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில்.
அமெரிக்காவின் நாசா அனுப்பிய மார்ஸ் ரோவரான, மார்ஸ் கியூரியாசிட்டி விண்கலம் இன்று செவ்வாய் கிரகத்தில் அழகாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. மனித குலத்தின் மிகப் பெரிய மைல் கல் சாதனையில் இதற்கும் மிகப் பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
ஒரு டன் எடை கொண்ட இந்த கியூரியாசிட்டி விண்கலம்தான் இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப‌ப்பட்ட விண்கலங்களிலேயே பெரியதாகும்.
8 மாத கால பயணத்தை முடித்து இன்று பத்திரமாக செவ்வாய் கிரகத்தில் லேண்ட் ஆகியுள்ள இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு செவ்வாய் கிரகத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அனுப்பப்போகும் படங்களும், வீடியோக்களும், ஆய்வுத் தகவல்களும் மனித குலத்தை மாற்றிப் போடப் போகும் முக்கிய விஷயமாகும்.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது, உயிர் வாழத்தகுதியானதாக இருக்கிறதா, உயிரினங்கள் ஏதேனும் அங்கு இருக்கின்றனவா என்பது குறித்த முக்கிய ஆய்வுக்கு இந்த கியூரியாசிட்டி உதவப் போகிறது.
இந்த விண்கலத்தில் 10 விதம் விதமான அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவைதான் ஆய்வுக்குப் பயன்படப் போகின்றன. இதற்கு முன்பு அனுப்பப்பட்ட மார்ஸ் ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி ஆகிய விண்கலங்களில் பொருத்தப்பட்டிருந்த சாதனங்களை விட இவை 15 மடங்கு அதிக எடை கொண்டவையாகும்.
மேலும் சில உபகரணங்கள் இதுவரை அனுப்பப்படாத புதிய சாதனங்கள். குறிப்பாக லேசர் பயரிங் சாதனம். இது பாறைப் பகுதியின் வேதித் தன்மையை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து ஆராயும் வல்லமை படைத்ததாகும்.
மேலும் கியூரியாசிட்டியின் கைகள் போல செயல்படும் ரோபாட்டிக் இயந்திரங்கள் செவ்வாய் கிரகத்தின் தரை மற்றும் பாறைப் பகுதியில் துளையிட்டு ஆய்வு நடத்தக் கூடியவையாகும். மேலும் செவ்வாய் கிரக மண்ணை அள்ளி எடுத்து சோதனை செய்யவும் இது உதவும். இந்த சோதனைக்கான அத்தனை வசதிகளும் கியூரியாசிட்டியிலேயே உள்ளன. எனவேதான் இதை ஒரு குட்டி ஆய்வகமாக கூறுகிறோம். அதாவது இந்த விண்கலமே அத்தனை ஆய்வுகளையும் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.
எனவே கியூரியாசிட்டியின் இந்த பயணம் மனித குலத்திற்கு மிக மிக முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. மேலும் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முயற்சிகளுக்கும் இந்த வி்ண்கலத்தின் பயணம் மிக மிக முக்கியமானது.
2030ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது. அதற்கான திட்டமிடல்களும், ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே கியூரியாசிட்டி தரப் போகும் தகவல்கள் மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
செவ்வாய் கிரக நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் கியூரியாசி்ட்டி தரையிறங்கியுள்ளது. கேல் கிரேட்டர் பகுதியில், ஒரு மலைக்கு அருகே இந்த விண்கலம் தற்போது இறங்கி நிற்கிறது.
இனிமேல்தான் தனது ஆய்வுகளை அது தொடங்கவுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா என்ற மிக முக்கியமான ஆய்வைத் தொடங்கப் போகும் கியூரியாசிட்டி மனித குலத்தை எந்த அளவுக்கு மாற்றி அமைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தற்போது செவ்வாய் கிரகத்தில் இறங்கியபோது தனது நிழல் கிரகத்தின் தரையில் படிந்ததை படம் எடுத்து அனுப்பியுள்ளது கியூரியாசிட்டி. இது அந்த விண்கலத்தின் நிழல் அல்ல, மாறாக மனித குலத்தின் சாதனை நிழல் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Thursday, August 2, 2012

பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன்
பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் என்பது தற்போது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக்கோள் சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது.



பூமியின் சிதறலே சந்திரன் என முந்தைய ஆய்வு தெரிவித்தது. அந்த சிதறல் எப்படி உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக சந்திரன் மற்றும் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
அதில் சந்திரனில் உள்ள மாதிரியில் பூமியில் இருப்பது போன்றே இரும்பு தாதுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இவைகள் ஒரே அளவில் இல்லை. சற்று வித்தியாசத்துடன் காணப்பட்டது.
இவைகள் தியா என்ற கிரகத்தின் மாதிரியுடன் தொடர்புடையதாக உள்ளன. எனவே, பூமி அதிவேகமாக சுற்றிய போது தியா என்ற பெரிய கிரகம் மோதியதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம்.
அதில் இருந்து விழுந்த சிதறலே சந்திரனாக மாறி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.