Pages

Thursday, June 30, 2011

விண்வெளி நிலையத்தை தாக்க வந்த விண் கல்: வீரர்கள் அவசரமாக வெளியேற்றம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 உறுப்பினர் கொண்ட குழு உள்ளது. இந்த வீரர்கள் இருந்த விண்வெளி நிலையத்தை பயங்கர கல் ஒன்று தாக்க வந்ததால் அவர்கள் அவசரமாக வெளியேறினர்.அந்த வீரர்கள் ரஷ்யா சோயுஸ் சிறிய கலத்திற்குள் அவசர நடவடிக்கையாக புகுந்தனர். 820 அடி இடைவெளியில் அந்த விண் கல் விண்வெளி நிலையத்தை தாக்காமல் சென்றது.அபாயகரமான வேகத்தில் கல் வருவதை தொடர்ந்து வீரர்கள் சோயுஸ் சிறிய கலத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர் என ரஷ்யா விண்வெளித் துறை தெரிவித்தது. கடந்த காலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து உள்ளன.
அவை அவசர நிலையை ஏற்படுத்தியது இல்லை என மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ரஷ்ய விண்வெளி கட்டுப்பாட்டு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது வீரர்கள் சோயுஸ் சிறிய கலத்திற்கு வந்தது அவசர நிலை நடவடிக்கை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.2009ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த நிகழ்வின் போது விண்வெளி வீரர்கள் இது போன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு சிறிது நேரம் வெளியேற வேண்டி இருந்தது.
விண் கல் எந்த நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வந்தடையும் என தெரியாததால் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது 3 ரஷ்யர், 2 அமெரிக்கர் மற்றும் ஒரு ஜப்பான் விண்வெளி வீரர் என 6 பேர் உள்ளனர்.ரஷ்ய சோயுஸ் கலம் மூன்று உறுப்பினர்களை பாதுகாக்கும் திறன் படைத்தது. கடந்த 2000ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையம் அருகே இரண்டு சோயுஸ் சிறிய கேப்சூல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி.

மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார்.இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, June 28, 2011

லண்டனில் சுற்றித் திரியும் வேற்றுகிரக வாசிகள்

வேற்றுகிரகத்தில் இருந்து பறந்து வரும் வினோத பொருட்கள் அடிக்கடி ஆச்சரியத்தை அளிப்பதுடன் பெரும் விவாதத்திற்கும் ஆளாகி வருகின்றன.
வேற்றுகிரக வாசிகளுக்கு கமெரா கூச்சம் இல்லை என மக்கள் பரவலாக பேசத் துவங்கி உள்ளனர். ஏனெனில் லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன.தெளிவான நீல வானத்தில் பறந்த அந்த வினோதப் பொருட்களை பார்த்ததும் வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் தங்கள் கையில் இருந்த கைத்தொலைபேசி கமெராக்களில் அதை பதிவு செய்தனர்.
வானில் தோன்றிய அந்த வினோதப் பொருட்கள் சிறு புள்ளிகளாக கடுமையான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அந்த 3 வினோதப் புள்ளிகளும் முக்கோண வடிவில் விண்ணில் சீறி சென்றன.

இதில் ஒரு புள்ளி மிக நீளமானதாக இருந்தது. அதே நேரத்தில மிகுந்த ஒளிரும் தன்மையுடன் காணப்பட்டது. அந்த நீள நிற புள்ளி வட்ட வடிவில் மற்ற பொருளை விட மெதுவான வேகத்தில் சென்றது.

இந்த வினோத பொருள் மேற்கு லண்டன் வான் பகுதியில் பறந்தது குறித்து ஆச்சரிமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. இந்த யுஎப்ஓ என்ன என்பதை விவரம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டும் என இளைஞர்கள் தங்கள் எதிரே வந்தவர்களிடம் கேள்விகளை கேட்ட வண்ணம் இருந்தனர். இந்த யுஎப்ஓ குறித்து இணையதள கருத்து பரிமாற்றத்திலும் கடுமையான விவாதம் காணப்பட்டது.

Monday, June 27, 2011

அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்

புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசன் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை.

இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது. பெர்சூயஸ் நட்சத்திர மண்டலத்தில் இந்த நட்சத்திரத்தின் வடக்கு-தெற்கு புலத்திலிருந்து அண்ட வெளியில் இந்த நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளது.

மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர் பாய்ந்து கொண்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி என்ற வானியல் தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது.

இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை உருவாக்குகின்றன.

ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் பாரன்ஹீட் அளவுக்கு சூடாகி வாயுவாக மாறுகின்றன.

பின்னர் நட்சத்திரத்திலிந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது. வெளியில் அண்ட வெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் இந்த ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள்

Saturday, June 25, 2011

சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி: விஞ்ஞானிகள் தகவல்


கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த நிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியில் இருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிக அளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன.

அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




Wednesday, June 22, 2011

பூமியின் காந்த தன்மையை உணரும் சக்தி மனித கண்களுக்கு உண்டு: ஆய்வில் தகவல்

பூமியின் காந்த ஈர்ப்பு தன்மையை உணரும் சக்தி மனித கண்களில் உள்ள புரதத்திற்கு உள்ளது. பறந்து செல்லும் பூச்சிகளின் கண்களில் காந்தப்புலம் தெரிவது இல்லை.

அதே பூச்சிகளுக்கு மனித கண் புரதத்தை செலுத்திய போது அந்த பூச்சிகள் பூமியின் காந்த புல பகுதியை கடக்கும் போது பதில் அளிப்பதாக இருந்தது. காந்த திசையை காட்டும் கருவியாக மனித கண் புரதம் இருக்கும் என்ற ஆய்வு விவரம் நேச்சர் கொம்யூனிகேஷன்ஸ் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வு குறித்த சர்ச்சை நீடித்த போதும் புதிய கண்டுபிடிப்பு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மனிதர்களை போல இடம்பெயரும் பறவைகளுக்கு பதிவு செய்யும் கிரிப்டோகிராம் மூலக்கூறு இருப்பது தெரியவந்துள்ளது.

1980ம் ஆண்டு முதல் மனித கண் புரதம் குறித்து மான்செஸ்டர் பல்கலைகழக பேராசிரியர் ரொபின் பேக்கர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார். அதில் மனிதர்களுக்கு காந்த சக்தி அறியும் ஆற்றல் இருப்பதையும் கண்டறிந்தார்.

பழமை வாய்ந்த புரதம் பெரும் வடிவ நிலைகளாக இருக்கும் போது கிரிப்டோ கிராம் என அழைக்கப்படுகின்றன. பூமியில் ஒவ்வொரு விலங்குக்கும் இந்த புரதம் உள்ளது.

இடம்பெயரும் பறவைகள், மொனார்கோ பட்டாம்பூச்சி, பழப்பூச்சிகள் ஆகியவற்றுக்கு தாங்கள் செல்லும் பாதையை கண்டறிய கண்ணில் உள்ள கிரிப்டோகிராம் புரதம் உதவுகிறது.

Friday, June 17, 2011

சூரிய மண்டலத்திற்கு வெளியே 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு


சூரிய மண்டலத்தில் தற்போது பூமி, செவ்வாய், சந்திரன், வியாழன், புதன், சனி போன்ற 9 கிரகங்கள் உள்ளன. இவை சூரியனை சுற்றி வருகின்றன.

இது தவிர ஏராளமான சிறிய கிரகங்களும் சூரியனைச்சுற்றி வருகின்றன. சூரிய மண்டலம் பற்றி சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர். அப்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே 10 கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பல லட்சம் வருடங்கள் வயது கொண்டவை. இதில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் உள்ள நெப்டியூன் கிரகத்தைப் போல் இரு மடங்கு பெரிது.

சனி கிரகம் போன்ற மற்றொரு கிரகமும் சூரிய மண்டலத்தின் வெளியே உள்ளது. பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்தி இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 கிரகங்களில் 7 கிரகங்கள் வெப்பம் அதிகம் நிறைந்தவை.

வான்வெளியில் தண்ணீரை பாய்ச்சி அடிக்கும் விண்மீன்கள்:

நெதர்லாந்தில் உள்ள வெஸ்டன் பல்கலைகக்கழக விஞ்ஞானிகள் விண்வெளியில் உள்ள சூரிய குடும்பம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சூரியனை சுற்றி அளவில் சிறியதாக உள்ள நட்சத்திர கூட்டம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இவை பூமியில் இருந்து 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

இவை கடந்த 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவை வாயுவினால் ஆன மேக மூட்டத்துக்குள் தூசி போன்று காணப்படுகின்றன.

இந்த மேக மூட்டத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நட்சத்திர கூட்டத்தை சுற்றிலும் ஹைட்ரஜன் மற்றும் ஓக்சிஜன் வாயுக்கள் படர்ந்து இருப்பதை கண்டறிந்தனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல ஆயிரம் டிகிரி வெப்ப நிலை மாற்றத்தின் மூலம் ஹைட்ரஜனும், ஓக்சிஜனும் ஒன்று சேர்ந்து அது தண்ணீராக மாறுகிறது. அந்த தண்ணீரை நட்சத்திர கூட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

சுமார் 2 லட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் அந்த தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டின் வேகத்தை விட 80 மடங்கு அதிவேகத்தில் அவை பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த தகவலை வெஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி லார்ஸ் கிறிஸ்டென்சென் தெரிவித்துள்ளார்.

ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்



நமது பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டு சரித்திரம் கொண்டது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஆண்டுகள் ஆகும்.

பிரபஞ்சத்திற்கு 100 கோடி ஆண்டுகள் ஆன நிலையில் வான்பகுதியில் 300 லட்சம் கறுப்பு ஓட்டைகள் அமைந்து இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இன்றைய நட்சத்திர கூட்டமைப்பு காணப்படும் நிலைக்கு இந்த கறுப்பு ஓட்டைகள் முக்கிய காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிரபஞ்சத்தின் பல லட்ச கறுப்பு ஓட்டைகள் குறித்த ஆய்வுக்கட்டுரை நேக்சர் இதழில் வெளியாகி உள்ளது. இந்த புதிய ஆய்வு நாசாவின் சந்த்ரா எக்ஸ்ரே கண்காணிப்பு பயன்பாடு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கறுப்பு ஓட்டையால் வான்வெளியின் அடர்த்தி பகுதியில் செல்ல முடியாது. பிரபஞ்சத்தில் இன்றும் சில பிரகாசமான பொருட்கள் உள்ளன. அவை கறுப்பு ஓட்டைகளின் விளைவு தான் என ஆராய்ச்சியின் தலைவரும் யேல் பல்கலைக்கழக விண்வெளி ஆய்வாளருமான தெவின் ஷாவின்ஸ் கூறினார்.

பெரும் வெடிப்பு மற்றும் துவக்க கட்ட வெடிப்புக்கு பின்னர் முதல் கறுப்பு ஓட்டைகள் எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. துவக்க கட்ட வெடிப்பின் விளைவாகவே நமது பிரபஞ்சம் உருவாகி உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Thursday, June 16, 2011

2012ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடும்: பிரான்ஸ் நிபுணர்கள் எச்சரிக்கை


இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதாயம் தேட யாரும் முயற்சிக்க கூடாது என பிரான்ஸ் மத அமைப்புகள் மிஷன் அறிவுறுத்தி உள்ளது.
உலகம் அழியப் போகிறது என பைபிளின் கணிப்பின் படி இந்த ஆண்டு மே மாதம் உலகம் அழியும் என முதலில் ஒரு கருத்து பரவியது. இந்த கணிப்பு முதலில் உலக நாடுகளில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ஆனால் அந்த கருத்து பொய் என எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இந்த ஆண்டு மே மாதம் முடிந்து ஜீன் மாதத்தின் மத்தியில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். பழைய பீதி மறைந்த நிலையில் புதிய கணிப்பு மக்களை அச்சபட வைத்து உள்ளது.

தற்போது மாயா மக்கள் அட்டவணைப்படி உலகம் வருகிற 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ந் திகதி அழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உலக அழியும் என்ற அறிவிப்பை கேட்டு பைரீனிஸ் மலைப்பகுதியல் ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருக்க முயற்சிப்பதாகவும் மாயா தரப்பு மக்கள் கூறுகிறார்கள்.

உளவியல் ரீதியாக பயத்திற்கு உள்ளான மக்கள் உலகம் அழியப் போகிறது என்ற கருத்தை பரப்புபவர்களின் செயல்பாட்டுக்கு இரையாவார்கள் என மிஷன் தலைவர் ஜார்ஜ் பினெக் கூறினார்.

ரோமானிய பேரரசு வீழ்ச்சி அடைந்த பின்னர் 2012ஆம் ஆண்டில் 183வது நாளில் உலகம் அழியும் என்ற கணிப்பு உள்ளது. முந்தைய யுகங்களைப் போலவே இந்த புது கணிப்பும் பொய்த்து போகும் என பகுத்தறிவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனால் உலகம் உடைந்து விடும், நாம் உயிர் பிழைக்க வேண்டும் என கருதும் சிலர் தப்பிக்க மலை போன்ற இடங்களில் இடம் தேடுகிறார்கள்.

முழு நேர சந்திர கிரகணம்


இந்த காட்சி பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். நிலா வான் உச்ச நிலைக்கு வருவதற்கு முன்பே கிரகணம் ஏற்பட தொடங்குவதால் துவக்க நிலை கிரகணத்தை ஐரோப்பியர்கள் பார்க்க முடியாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

சந்திர கிரகணம் பிரிட்டன் நேரப்படி மாலை 6.24 மணி முதல் நள்ளிரவு வரை நீடித்தது. பிரிட்டனில் சூரிய அஸ்தமனம் இரவு 9.19 மணி வரை நீடித்ததால் கிரகண துவக்கத்தை காண முடிந்தது.

பூமியின் நிழல் நிலவில் படிவதால் கிரகணம் ஏற்படுகிறது. சந்திர கிரகணத்தை ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதி மக்கள், மத்திய ஆசியா, மேற்கு அவுஸ்திரேலியா மக்கள் முழுமையாக பார்த்து ரசிக்கலாம். ஆனால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் அங்கு வெளிச்ச நேரத்தில் நடைபெறுவதால் காண முடியாது.

பொதுவாக சூரிய ஒளி முலம் நிலா பிரகாசம் பெறுகிறது. சந்திரன் எனப்படும் நிலா, பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் உள்ளன. சந்திரகிரகணத்தின் போது பூமி நிழல் முழுவதும் மறைப்பதால் நீலம், சிவப்பு, கறுப்பு, பழுப்பு என ஏதேனும் ஒரு நிலையை பெறுகிறது

Wednesday, June 15, 2011

இன்றிரவு பூரண சந்திரகிரகணம்

இன்று இரவு பூரண சந்திர கிரகணம் ஏற்படும் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு 11.52 மணிக்கு ஆரம்பமாகும் கிரகணம் அதிகாலை 3.32 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரகண அதிபதியாக சந்திரன் வருவதால், கிரகணத்துக்குப் பிறகு வரும் காலத்தில் சூறாவளி காற்று வீசும்; நல்ல மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது. இன்றைய சந்திரகிரகணத்தை 21-ஆம் நூற்றாண்டின், அடர் இருள் சந்திர கிரகணம் என்கின்றனர். இதே போன்ற சந்திரகிரகணம் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி ஏற்பட்டது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், அது மறைக்கப்படுகிறது. அடுத்து இதே போன்ற அடர் சந்திரகிரகணம் 2141 ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இந்திய வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருக்கும் பாரிய தீப்பிழம்பு

பயங்கர சத்தத்துடன் இது பூமியை நோக்கி வந்துகொண்டுள்ள போதிலும் யாரும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பேராசிரியர் பிரயன் கொக்ஸ் தெரிவித்துள்ளார்.

சூரியன் என்பது பூமியின் அளவைப் போன்ற ஒரு மில்லியன் மடங்கு பெரிய ஒரு பாரிய அணு உலையைப் போன்றது. அங்கும் இங்குள்ளதைப் போன்ற மோசமான காலநிலை ஏற்படுவதுண்டு.

திங்கள்கிழமை(06/06/2011) சூரியனின் காலநிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதனால் சூரியனிலிருந்து பாரிய தீ சுவாலை வெளிப்பட்டுள்ளது.

இதனை சூரியக் கிளர்ச்சி என்றும் வர்ணிக்கலாம். மிகவும் சூடேறிய பில்லியன் கணக்கான தொன்கள் எடை கொண்ட துணிக்கைகள் ஒன்று சேர்ந்து பாரிய சுவாலையாக வெளியேறியுள்ளன.

இருந்தாலும் இந்த தீ சுவாலையின் வெளிப்பாடு நேரடியாக பூமியை நோக்கியதாக அமையவில்லை. அதனால் இதன் தாக்கமும் அவ்வளவாக பூமியில் உணரப்படவில்லை.

பூமியின் தூர வடமுனைப் பகுதியில் வானத்தில் ஒளி விளக்குகள் நடனமாடுவதுபோல் இதை ஓரளவு அவதானிக்கலாம்.

அண்மைய வரலாற்றில் சூரியனிலிருந்து மிகப் பெரிய தீ பிழம்பு வெளிப்பட்டது 1859 செப்டம்பர் 1ல். இதை கெரிங்டன் பிழம்பு என்று குறிப்பிடுகின்றனர்.

ஆங்கில வானியல் நிபுணர் சேர் றிச்சர்ட் கெரிங்டன் இதை அவதானித்ததால் இந்தப் பெயரில் இது அழைக்கப்படுகின்றது.

இதனோடு ஒப்பிடுகையில் தற்போது வெளிப்பட்டுள்ள பிழம்பு மிகவும் சிறியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெரிங்டன் பிழம்பு போன்ற ஒன்று 500 வருடங்களுக்கு ஒரு தடவைதான் இடம்பெறும் சாத்தியம் உள்ளதாம்.

செவ்வாய் கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தினால் புதிய சர்ச்சையில் நம்பவே முடியவில்லை ஆனாலும் செய்தியை பாருங்கள்


நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கும். ஆனால், உண்மையிலேயே வியக்க வைக்கும் தகவல்கள் கொண்டது இந்த கட்டுரை.

இதிலே கூறப்பட்டு இருக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வெகு வேகமாக நமது பூமியும், செவ்வாய்க் கிரகம் போலே ஆகிவிடும் போல் தெரிகிறது. படித்துப் பாருங்கள். ஒரு இரண்டு வருடம் முன்பே , இணையத்தில் வெளியாகி உள்ள கட்டுரை இது.

பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை ‘அம்மா’ என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?

வழக்கமாக நம் மூளையில் பதியப்பட்ட தகவல்களின்படி, ‘இல்லை’ என்பதே நம் பதிலாக இருக்கும்.

ஆனால் இதெல்லாம் நடந்தது .... என்று சொல்கிறார்கள் போரிஸ்காவின் பெற்றோர்.

சிலருக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வரும். அந்த மாதிரி , இந்த பையனுக்கு பூர்வ ஜென்ம வாசனை வந்து, நான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த பையன் என்று கூறி, அதன் பிறகு விஞ்ஞான உலகையே அவனது தகவல்களால் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறான்.

யார் இந்த போரிஸ்கா?

ரஷ்யாவில், சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியானோவிச், சுருக்கமாக போரிஸ்கா. மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளாக மாற்றியவன். தற்போது 12 வயதாகிறது இந்தச் சிறுவனுக்கு.

இவனது அசாத்தியமான ஆற்றல்களைக் கண்டு கவலைப்படுகின்றனர் பெற்றோர். புதிரான சில வழிகளின் மூலம் அவனுக்குள் தகவல்கள் ஊட்டப்படுவதாக எண்ணுகின்றனர்.

இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே ‘தானாக’ பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறுகின்றனர்.

சில நேரங்களில், சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம், அங்கு நிலவிய வாழ்க்கை முறை, இதர கிரக அமைப்புகள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறானாம் போரிஸ்.

தான் செவ்வாய் கிரகத்திலிருந்து பிறப்பெடுத்து இங்கு வந்ததாகவும், இன்றும் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிப்பதாகவும், ஆனால் பயங்கரமான பேரழிவினால் தற்போது நிலத்தின் அடிப்பரப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறான். மேலும், செவ்வாய் கிரக வாசியாக இருந்தபோது, பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாகவும் கூறுகிறான்.

லெமூரியக் கண்டத்தின் ஆய்வுப் புத்தகம் ஒன்றை அவனது தாய் அவனுக்குக் கொடுத்தபோது, ஆச்சரியத்துடன் பார்த்த போரிஸ், லெமூரியா கண்டத்தின் அழிவு பற்றி பரபரப்பாக விவரிக்க ஆரம்பித்தான். இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டால், எல்லாம் நினைவில் இருக்கிறது என்று பதிலளிக்கிறான்.

பெரிய பிரமிடுகளைப் பற்றிப் பேசும் போரிஸ், மனிதத் தலை, சிங்க உடம்பாக காட்சியளிக்கும் Sphinx பிரமிடுக்குள் மனித வாழ்க்கையின் ரகசியங்கள் இருக்கின்றன என்றும், அதைத் திறப்பதற்கான வழி அதன் காதுப் பகுதியில் உள்ளதுபோலத் தெரிவதாகவும் விவரிக்கிறான்.

போரிஸ்காவைப் போன்ற குழந்தைகள் பிறப்பது சமீப காலத்தில் சாத்தியமாகியுள்ளது என்றும் பொதுவாக 1980க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற இயற்கையின் கொடை கிடைத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இத்தகைய தன்மையுடையோரை ‘இண்டிகா குழந்தைகள்’ என்றும் அழைக்கின்றனர்.

மாறிவரும் பூமியின் காந்தப் புலனானது 2009 மற்றும் 2012 காலகட்டங்களில் மிகப் பெரும் இரண்டு அழிவுகளை ஏற்படுத்தும் என்று போரிஸ் கூறுகிறான்.

செவ்வாயில் ஏற்பட்ட பேரழிவிற்கு அணு ஆயுதப் போரே காரணமென்றும், கதிரியக்கங்களின் வீரியம் காரணமாக, தப்பிப் பிழைத்தவர்கள் வெளியே வரமுடியவில்லை என்றும் பாதுகாப்பான கவச அறைகளில் அவர்கள் பாதாளத்தில் வாழ்வதாகவும் கூறும் போரிஸ், அவர்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து வாழ்பவர்கள் என்றும் கூறுகிறான்.

பூமியைப் பொறுத்த வரை ஆக்ஸிஜனை மட்டுமே சுவாசிக்க முடியும் என்றும், ஆனால் இந்த பிராணவாயு மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதாகவும் சொல்கிறான்.

விண்வெளியைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருக்கும் போரிஸ் UFOக்களைப் பற்றியும் நிறைய பேசுகிறான். செவ்வாயில் இருக்கும்போது ஸ்பேஸ்கிராஃப்டை இயக்கும் பயிற்சி பெற்றிருந்ததாகவும் கூறுகிறான்.

இவனை வியப்புடன் நோக்கும் விஞ்ஞான உலகம், விஞ்ஞான பேராசிரியர்களே சரளமாக உரையாடுவதில் உள்ள சிக்கல்கள் இவனுக்கு இல்லை எனத் தெரிவிக்கிறது.

போரிஸ்காவைப் பொறுத்தவரை “கள்ளங்கபடமில்லாத அன்பும், எதையும் மன்னிக்கும் தயாள குணமுமே மக்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி என்றும், இதைத் தாண்டிய எந்தவொரு விஷயமும் மனித குல அழிவிற்கு வழிவகுக்கும்” என்கிறான்.

போரிஸ்காவின் கூற்றுகளின் படி, நாம் வாழும் இப்பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஆயத்தமாகி வருவது போலத் தெரிகிறது.

Monday, June 13, 2011

விண்வெளியில் வாழும் இரட்டையர்கள்


நட்சத்திரங்கள் அவற்றுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையின் காரணமாக ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டு சுற்றிக் கொண்டு இருக்கும். இத்தகைய நட்சத்திரங்களை இரட்டை நட்சத்திரங்கள் என அழைப்பர்.

குழந்தைகளில் இரட்டைக் குழந்தைகள் போன்று விண்வெளியில் இந்த இரட்டை நட்சத்திரங்கள் உள்ளன. பெரும்பாலான இரட்டை நட்சத்திரங்களை நாம் வெறும் கண்ணால் பார்க்கும் போது ஒரே நட்சத்திரமாகத் தெரியும்.

இரட்டை நட்சத்திரங்களைத் தனியே காண வேண்டுமெனில் அதிக திறன் கொண்ட தொலைநோக்கிகள் தேவையாகும். விண்வெளி விஞ்ஞானிகளுக்கு இந்த இரட்டை நட்சத்திரங்கள் அதிகளவில் பயன்படுகின்றன.

இரட்டை நட்சத்திரங்களின் உதவியோடு நட்சத்திரங்களின் எடையை எளிதில் கண்டறியலாம். எத்தனையோ தொடர் ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும் விஞ்ஞானிகளுக்கு விண்வெளி மிகப் பெரிய புதிராகவே உள்ளது. இந்த புதிருக்கு மேலும் வலு சேர்ப்பது போல இரட்டை நட்சத்திரங்கள் உள்ளன.

Sunday, June 5, 2011

54 கோள்களில் மனித வாசனை


தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிடுகிற நமது சூரியன் போல சின்னதும் பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத் திரங்கள் கொண்ட பிரமாண்ட ஏரியா ‘பால்வழித் திரள்’ (கேலக்சி) எனப்படுகிறது.

மிகமிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலைவுகள் ‘ஒளி ஆண்டு’ அடிப்படையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது, கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ. வேகத்தில் போனால்கூட கேலக்சியின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் போவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.. அவ்ளோ பெரிசு.

இந்த கேலக்சி ‘ஏரியாவில்’ பூமி, புதன், சனி போல 5 ஆயிரம் கோடி கோள்கள் இருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் சுமார் 50 கோடி கோள்களில் அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத, மனிதர்கள் உயிர்வாழ உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அமெ ரிக்கா விண்வெளி ஆய்வு மையம் (நாசா) அனுப்பிய கெப்ளர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.

‘‘கெப்ளர் விண்கலம் இதுவரை அனுப்பிய லட்சக்கணக்கான புகைப்படங்களை ஆராய்ந்ததில் 1235 கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கின்றன. 54 கோள்களில் ஏற்கனவே மனிதர்கள், உயிர்கள் இருந்திருக்கக் கூடும்.

கோள்களில் மனித உயிர்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. அண்ட வெளியில் உள்ள கோள்கள் குறித்து காஸ்மிக் கணக்கெடுப்பு நடத்துவதே ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம்’’ என்று கெப்ளர் விண்கலத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் வில்லியம் பெரூக்கி கூறியுள்ளார். மேலும் பல புதிய கிரகங்கள், மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தொடர் ஆய்வில் தெரியவரும்

Friday, June 3, 2011

புதன் என்னும் மாயகிரகம் !

புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானி கோப்பர்னிக்கஸ் மரணப்படுக்கையில் கிடக்கும் போது கடைசிவரை என்னால் புதன் கிரகத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்ததுடன் கூறினாராம். அவரால் பார்க்க முடியாமல் போனாலும் தற்போதைய தலைமுறைக்குபுதன் கிரகத்தின் படங்களையும், அதைபற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை மெசஞ்சர் விண்கலம் ஏற்படுத்தியிருக்கிறது.
சூரியகுடும்பத்தின் முதல்கிரகம் புதன். பூமியை போல புதன் தன்னை தனே சுற்றிக்கொள்வதில்லை. சூரியனை சுற்ற அது எடுத்துக்கொள்ளும் காலம் 88 நாட்கள். சூரியனிலிருந்து 6 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அதன் பகல் பொழுது வெப்பம் 400 டிகிரி செல்சியஸ், இரவு பகுதி வெப்பம் - 260 டிகிரி செல்சியஸ்.ஒருசெகண்டிற்கு 29.4 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது. பூமியில் 18 புதன் கிரகங்களை போட்டு நிரப்பிவிடலாம், அந்த அளவுக்கு சிறியது. இது போன்ற தகவல்களை தொலைநோக்கிகள், கணக்கீடுகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.
1973ம் ஆண்டு அமெரிக்காவால் அனுப்பட்ட மாரினார் 10 விண்கலம் ஒரு புதிய தகவலை சொன்னது. புதன் கிரகத்தின் அடர்த்தி அதிகம். வெள்ளி, பூமி, செவ்வாய் கிரகங்களில் பாறை பகுதி 70 சதமாகவும் 30 சதம் இரும்பு உள்ளடக்கமாகவும் இருக்கிறது.புதனில் 30 சதம் பாறை பகுதியும், 70 சதம் இரும்பு உள்ளடக்கம் கொண்டதாகவும் இருக்கிறது.
1977ம் ஆண்டு அனுப்பட்ட வாயேஜர்- 2 விண்கலம் வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன் கிரகங்களை ஆராய்ந்துவிட்டு சூரியமண்டலத்தின் எல்லையைத் தாண்டி சென்றுவிட்டது. வியாழன் கிரகத்தை கலிலியோ விண்கலம் 1995 முதல் 14 ஆண்டுகள் ஆராய்ந்தது. 2004ம் ஆண்டு முதல் சனிகிரகத்தை காசினி விண்கலம் சுற்றி வருகிறது. வெள்ளி கிரகத்தை மெகல்லன் விண்கலம் போன்ற பல விண்கலங்கள் மூலம் ஆராயப்ட்டுள்ளது. ஆனால் புதன் கிரகத்தின் மீது விஞ்ஞானிகளின் பார்வை திரும்பவேயில்லை.
புதன் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்புவதில் பிரச்சனைகள் உண்டு. பூமியானது சூரியனில் இருந்து சுமார்15 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. புதன் சூரியனிலிருந்து வெறும் 6 கோடி கி.மீ. தெலைவில் உள்ளது.புதன் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்புவது சூரியனை நோக்கி அனுப்புவதற்கு சமம்.இதில் இரண்டு பிரச்சனைகள் உண்டு. வெப்பம் அதிகரிக்கும், மேலும் விண்கலத்தின் வேகம் அதிகரிக்கும்.புதன் கிரகத்தை செல்வதற்கு பதிலாக சூரியனைநோக்கி சென்று சாம்பலாகிவிடும். புதன் கிரகத்தை நெருங்கி புதன் கிரகத்தின் ஈர்ப்பு பிடியில் சிக்குகிற அளவுக்கு விண்கலத்தின் வேகம் குறைந்தால்தான் விண்கலம் புதன் கிரகத்தை சுற்ற ஆரம்பிக்கும்.வேகத்தை குறைப்பது தான் பிரச்சனை.
2004 ஆகஸ்டில் அனுப்பபட்ட மெசஞ்சர் வினாடிக்கு 640 கிலேமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது.இதன் வேகத்தை படிப்படியாக குறைக்க புதிய வழி கையாளப்பட்டது.இதன் படி மெசஞ்சர் விண்கலம் சூரியனை ஒரு சுற்றுசுற்றிவிட்டு மறு ஆண்டு ஆகஸ்டில் பூமியை நெருங்கியது. அப்போது அதன் வேகம் சற்று குறைந்தது.பின்னர் மேலும் சில சுற்றுகள் சுற்றிவிட்டு வெள்ளி கிரகத்தை 2006 - மற்றும் 2007ம் ஆண்டில் கடந்து சென்றது. அதனால் மேலும் வேகம் குறைக்கப்பட்டது. பின்னர் சூரியனை மேலும் சிலமுறை சுற்றிக்கொண்டே புதன் கிரகத்தை நெருங்கியது.இந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி புதன் பிடியில் சிக்கி சுற்ற ஆரம்பித்தது. அமெரிக்க நாசா விண்வெளி அமைப்பை சேர்ந்த சென்வான்யென் எனபவர்தான் மெசஞ்சர் விண்கலத்தின் பாதையை திட்டமிட்டு கொடுத்தார்.
பூமியிலிருந்து புதன் கிரகம் அதிகபட்சமாக 22 கோடி கிலோமீட்டர் துரத்தில் தான் உள்ளது. 2004 ம் ஆண்டில் செலுத்தபட்ட மெசஞ்சர் ஆறரை ஆண்டுகாலம் விண்ணில் அங்கும் இங்குமாக வட்டமடித்து புதனை நெருங்கிய போது அது பயணம் செய்த தூரம் 790 கோடி கிலோ மீட்டர்.சூரியனின் அதிகமான வெப்பத்தை தாங்க காப்பு கேடயம் தாயாரிக்க மட்டும் 7 ஆண்டுகள் பிடித்தன.மேலும் விண்கலத்தை உருவாக்கதிட்டம், அதை செய்துமுடிக்க ஆகும் காலம், பாதை உத்திகளை உருவாக்க என சுமார் 20ஆண்டுகள் பிடித்தன.
மெசஞ்சர் விண்கலம் 363 புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் இருட்டு பகுதியில் ''டெபுசி'' என்று அழைக்கப்படுகிற கதிர்வீச்சு காணப்படுவதாகவும். அதன் பகல் பகுதியும், இருள்பகுதியும் சந்திக்கும் பகுதியில் ஒளிவட்டம் போன்ற வளையம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மெசஞ்சர் மேலும் அனுப்புகிற தகவல்களை கொண்டு புதன் என்னும் மாய உலகத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
புதன் கிரகத்தை பற்றி ''பொன் கிடைக்தாலும் புதன் கிடைக்காது'' என்ற மிக பிரபலமான சொலவடை உள்ளது. புதனை வெறுங்கண்ணால் பார்க்க இயலும் என்றாலும் எளிதில் தென்படாது. சூரியனுக்குப் பக்கத்தில் இருப்பதால் அதிகாலையில் கிழக்குப்பக்கம் சூரிய உதயதிற்கு முன்னால் சிறிது நேரம் தெரியும், அல்லது மாலை நேரம் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மங்களான சிறிய புள்ளியாகத் தெரியும். மெசஞ்சர் விண்கலம் மூலமாக புதன் கிடைத்து விட்டது

அழிந்து போவதாக கருதப்பட்டு வந்த கேலக்சிகள் புதிய நட்சத்திரங்களை உருவாக்குகின்றன

விண்வெளியில் உள்ள பால் வீதி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு அழிவு இல்லை.பழமையான கேலக்சிகள் அழிந்து போவதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அவை புதிய நட்சத்திரங்களை உருவாக்குவதை மிச்சிகன் பல்கலைகழக வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்தப் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளரான வானியல் ஆய்வு பேராசிரியர் ஜோல் பிரகமன் பழைய கேலக்சிகளில் இருந்து உருவாகும் புதிய நட்சத்திரங்கள் குறித்த கண்டுபிடிப்பை தெரிவித்து உள்ளார்.மே 31ம் திகதி ஒண்டோரியாவில் உள்ள லண்டனில் கனேடிய விண்வெளி சொசைட்டிகூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜோல் குழுவினர் தங்களது கண்டுபிடிப்பை தெரிவித்தனர்.
நீண்ட தொலைவில் உள்ள பொருட்களை மிக நுணுக்கமாக அவதானிக்க உதவும் கமெரா மூலம் விண்வெளி நுண்ணோக்கியில் ஆய்வு செய்த போது 400 லட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள 4 பால் வீதி மண்டலத்தில் புதிய இளம் நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டம் உருவாகி இருப்பது தெரியவந்தது.ஒரு ஒளி ஆண்டு என்பது 5-9 டிரில்லியன் மைல்கள் ஆகும். ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி என்ற அளவை குறிப்பதாகும்.


Wednesday, June 1, 2011

சந்திரனில் அதிக அளவில் சுத்தமான நீர்; விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

பூமியின் துணைக்கிரகமான சந்திரனில் நிறைய கனிம வளம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தண்ணீர் வளம் உள்ளதா என்பது பல தடவை ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட பிறகும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் மிகத்திறமையாக ஆய்வு செய்து சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் இதை உறுதி செய்து உள்ளனர்.

இதையடுத்து சந்திரனில் என்ன என்ன வளங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க நாடுகளிடம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதற்கிடையே சந்திரனிலும் நாம் எதிர்பார்த்ததை விட அதிக தண்ணீர் வளம் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி, கர்ஜினி அறிவியல் கழகம், பிரவுன் யுனிவர்சிட்டி விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதுவரை கணிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிக சுத்தமான தண்ணீர் நிலவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது விஞ்ஞானிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.