Pages

Saturday, July 30, 2011

சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்

சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் பால் ஹார்டாக் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சனி கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். சனி கிரகத்தை சுற்றி பல சந்திரன்கள் உள்ளன. அவற்றில் அக்கிரகத்தின் மேல் பகுதியில் ஆறாவது மிகப்பெரிய சந்திரன் உள்ளது. அது முழுவதும் ஐஸ் கட்டினால் மூடப்பட்டுள்ளது.

இதனால் சனிகிரகத்தில் மழை பெய்து அதன் மூலம் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அங்கு ஆவி நிலையில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவை சனி கிரகத்தை சுற்றி வட்டவடிவில் உள்ளது. இது அந்த கிரகத்தின் சுற்றளவை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Friday, July 29, 2011

புதன்

சூரிய குடும்பத்தில் முதலாவதாக சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன் (Mercury) ஆகும். சூரிய குடும்பத்தின் மிக சிறிய கிரகம் இதுவாகும். இதற்கு துணைக் கோள்கள் இல்லை. இது சூரியனை 88 நாட்களில் சுற்றிவருகிறது. இக்கிரகம் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லை. எனவே சூரியனைப் பார்த்திருக்கும் இதன் பக்கம் மிக வெப்பமாகவும், சூரியனுக்கு மறைவாக இருக்கும் பகுதி மிக குளிர்ந்த பகுதியாகவும் விளங்குகிறது. இதில் -1830C முதல் 4270C வரை வெப்பம் நிலவுகிறது. சூரியனின் அதிகபட்ச ஒளியினால் இதனை காண்பது அரிதாகவே உள்ளது. காலை மற்றும் மாலை கருக்கல் நேரங்களில் மட்டுமே இதனை காண இயலும்.

பூமியின் வட்டப்பாதையில் சூரியனை சுற்றும் முதல் ட்ரோஜன் கிரகம் கண்டுபிடிப்பு

பூமியின் வட்டப்பாதையில் சூரியனை சுற்றும் முதல் ட்ரோஜன் கிரகத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் கண்டுபிடித்து உள்ளது.

பூமிக்கு இணையாக ஒரே வட்டப்பாதையில் அருகே அமைந்து சூரியனை சுற்றும் கிரகத்திற்கு ட்ரோஜன் என்று பெயர். பூமியைச் சுற்றி நிறைய ட்ரோஜன்கள் இருக்கலாம்.

அவை மிகச்சிறியதாக இருப்பதாலும், பூமியின் கோளத்தில் இருந்து கணக்கிடும் போது ட்ரோஜன் கிரகம் சூரியனுக்கு அருகாமையில் உள்ளன. எனவே அவற்றை காண்பதில் மிகுந்த சிரமம் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த சிறிய கிரகங்கள் பகல் நேர வெளிச்சத்திலேயே மூழ்கி கிடக்கின்றன. எனவே அதனை பார்ப்பதற்கு சிரமமாக உள்ளது என கனடா அதபாஸ்கா பல்கலைக்கழக ஆய்வாளர் கானர் கூறுகிறார்.

கானர்சும், இவரது குழுவினரும் நியோ-வைஸ் புள்ளி விவரங்களை வைத்து பூமி வட்டப்பாதையில் உள்ள ட்ரோஜன்களை பற்றி ஆய்வு செய்தனர்.

நியோ என்பது பூமிக்கு அருகே உள்ள பொருள் என்பதாகும். நியோ-வைஸ் திட்டத்தில் மிகச்சிறிய 1 லட்சத்து 55 ஆயிரம் கிரகங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகம் இடையே இவை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மிகப்பெரிய விண்வெளி கல் சீனாவில் கண்டுபிடிப்பு

பூமியில் சில தருணங்களில் விண்வெளி கற்கள் விழுவது உண்டு. அவ்வாறு விழுந்த அதிசய விண்வெளி கல் ஒன்றை சீன நிபுணர்கள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர்.

சீனா மற்றும மங்கோலியாவை பிரிக்கும் அல்டாய் மலைப்பகுதியில் இந்த விண்வெளிக் கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விண்வெளி கல் 2.2 மீற்றர் நீளமும், 1.25 மீற்றர் உயரமும் கொண்டதாக உள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய 3வது விண்கல்லாக இந்த கல் உள்ளது. இந்த விண்வெளி கல் நமது பூமியில் உள்ள கல்லை விட கடினமாக இருந்தது. அட்லாய் மலைப்பிராந்தியத்தின் 10 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளிக் கல் இருந்தது. இந்த விண்வெளிக் கல் மேற்பரப்பு, கறுப்பு, சிவப்பு என பல வண்ணங்களை பிரதிபலித்தது.


இந்த விண்வெளிக் கல்லை எதிர்பாராத விதமாக தான் கண்டுபிடித்தோம் என ஷாங்போலின் தெரிவித்தார். இவர் பெய்ஜிங் கண்காணிப்பக விண்வெளி கல் ஆய்வு நிபுணர் ஆவார்.

விண்வெளிக் கல் இரும்பு சார்ந்ததாக இருக்கும் என

ஷாங்போலின் தெரிவித்தார். சூரியக் குடும்பம் உருவாகும் தருணத்தில் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளி கிரகங்கள் சேதம் அடைந்து இந்த கற்கள் உருவாகி இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

1808 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும், 1923 ஆம் ஆண்டு நமீபியாவிலும் மிகப் பெரிய விண்வெளிக் கல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Thursday, July 28, 2011

சந்திரன்

சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களுள் மூன்றாவது இடத்தில் இருப்பது பூமி. இந்த பூமியின் ஒரே துணைக்கோளாக விளங்குவது சந்திரன் (நிலா). இது குறிப்பிட்ட கால அளவில் பூமியைச் சுற்றி வருகிறது. அதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் 27 1/3 நாள்கள். சந்திரன் தன் சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றி வரும்போது மிக அருகாமையில் 356,395 கி.மீ. தொலைவிலும், விலகிச் செல்லும்

போது 406,767 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

சந்திரன் (Moon) சுயமாக ஒளிரும் தன்மை அற்றது. அது சூரியனிலிருந்து வரும் ஒளியைப் பெற்று பூமிக்கு அளிக்கிறது. சந்திரனின் விட்டம் 3,480 கி.மீ. ஆகும். சந்திரன் தன் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் போது அமாவாசையும், பௌர்ணமியும் ஏற்படுகின்றன. அதேபோல், சந்திரனின் வட்டப்பாதையில் ஏற்படும் சில மாறுதல்களினால் சந்திரகிரகணமும், சூரியகிரகணமும் ஏற்படுகின்றன.

சந்திரனின் ஈர்ப்புவிசை பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கையே கொண்டுள்ளது. அதேபோல் சந்திரனில் காற்றுமண்டலம் இல்லை. இதுபோன்ற காரணங்களால் சந்திரனில் மனிதர்கள் வாழ இயலாது. இது நிலவு, திங்கள், அம்புலி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சூரியன்

சூரியன் (Sun), பூமி அமைந்திருக்கும் சூரிய மண்டலத்தின் மையத்தில் அமைந்துள்ள விண்மீன் ஆகும். இதுவே சூரிய மண்டலத்தில் அமைந்துள்ள அனைத்து கோள்களும் பிற பொருள்களும் இயங்கத் தேவையான ஆதார சக்தியாக விளங்குகிறது. சூரியன், சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. சூரியனின் மொத்த ஆயுள் சுமார் 1000 கோடி ஆண்டுகள் ஆகும். அதில் 470 கோடி ஆண்டுகள் தற்போது முடிவடைந்துள்ளன.

சூரியன் 1,392,000 கி.மீ. விட்டம் உடையது. சூரியனுக்குள் பத்துலட்சம் பூமியை வைக்கலாம் அவ்வளவு பெரியது. இது பூமியில் இருந்து சுமார் 149,600,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சூரியனில் பெருமளவில் ஐதரசன் (74% நிறை) மற்றும் ஹீலியம் (24% நிறை) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்ஸிஜன், சிலிக்கான், கந்தகம், மக்னீசியம், கரிமம், நியான், கால்சியம், குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

நமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. நமது சூரியன் அமைந்துள்ள ஓரியன் வளைவுக்கும், அருகில் உள்ள பெர்சியஸ் வளைவுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6,500 ஒளியாண்டுகள் (பால் வீதி) சுற்றி வர சுமார் 225 - 250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Wednesday, July 27, 2011

சூப்பர் நோவா

நட்சத்திரங்கள் சக்தி குறைந்து சுருங்கும்போது அதன் சுழலும் வேகம் அதிகரிக்கும். சில நட்சத்திரங்கள் மணிக்கு பத்து மில்லியன் மைல் வேகத்தில் சுழலுகின்றன. உட்புறத்திலுள்ள அழுத்தமும் மேல்புறத்திலுள்ள வேகமும் அதை வெடிக்கச் செய்கின்றன. அது ஒரு பில்லியன் நட்சத்திரங்களுக்கு ஒப்பான பேரொளியை வீசி வெடிக்கிறது. சில சமயங்களில் அது தனது சொந்த அண்டம் முழுவதையும்விட மிகப் பிரகாசமடைகிறது. அதனுடைய வாயுக்கள் சீறி வெளிப்பட்டு அண்டப்புற வெளியில் பரவுகின்றன. இதுவே, சூப்பர் நோவா ஆகும்.

முதன் முதலாக சீன வான ஆராய்ச்சியாளர்களால் கி.பி. 1054 - ஆம் ஆண்டு சூப்பர் நோவா (super Nova) கண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர்1572 - இல் டைக்கோ சூப்பர் நோவாவை கண்டு பதிவு செய்தார். அது பட்டப்பகலிலும் எளிதில் தெரிந்தது. அதன் பிறகு 1604 - இல் கெப்ளர் சூப்பர் நோவாவைக் கண்டுப்பிடித்து கூறினார்.

கருந்துளைகள்

எல்லையற்ற பிரபஞ்சத்தை அழிக்கும் சக்திவாய்ந்தவை கருந்துளைகள். பிரபஞ்சத்தில் காணப்படும் இந்த விநோத பொருள் பற்றிய மர்மங்களை விஞ்ஞானிகளால் விடுவிக்க முடியவில்லை. மிகப்பெரிய பிரமாண்டமான நட்சத்திரங்கள் திடீரென தனித்தனியாகச் சுருங்கியதன் விளைவாக கருந்துளைகள் உருவாயின. அவற்றுள் காணப்படும் நிறையீர்ப்புச் சக்தியின் காரணமாக ஒளி வெளியேற்றப்படுவதில்லை. நட்சத்திரங்களின் மேற்பரப்பைக் காட்டிலும் கருந்துளைக்குள் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

இவை மிக வழவழப்பான பொருளாக இருக்க வேண்டும். இவற்றின் நிறையீர்ப்பு சக்தியின் காரணமாக எந்த கதிர்வீச்சும் வெளிவர இயலாது. இவற்றிடம் மாட்டிக் கொண்ட பொருட்கள் கூட வெளியே வர இயலாது. இவற்றை பிளக்கவோ, அழிக்கவோ, சுருக்கவோ இயலாது. இவை வளர்ந்து கொண்டே செல்லும். இவற்றின் வளர்ச்சியைக் கூட தடுக்க இயலாது. இவை விண்மீன்களோடு ஜோடி சேர்ந்து சுற்றி வருகின்றன. நட்சத்திரங்களின் வாயுக்களைக் கவர்ந்து இழுத்து அந்த நட்சத்திரங்களையே விழுங்கி விடுகின்றன. அவ்வாறு விழுங்கும்போது வெப்பமடைந்து X கதிர்கள் வெளியிடப்படுகின்றன. இந்த வாயுக்களின் சத்தங்களைக் கொண்டுதான் கருந்துளைகள் இருப்பதைக் கண்டறிய முடியும்.

செயற்கை துணைக்கோள்களில் அனுப்பட்ட X கதிர் தொலைநோக்கி8000 ஒளியாண்டு தொலைவில் செறிவுமிக்க X கதிர் வெளியானதைக் கொண்டு கருந்துளை காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சைக்எக்ஸ்எனப் பெயரிடப்பட்ட இந்த கருந்துளை சூரியனை விட 3 மடங்கு பெரியது. HDE -226868 என்ற நட்சத்திரத்துடன் ஜோடி சேர்ந்திருந்தது.

இதனையடுத்து Dr. ஜோசப் வெபர் பால்வீதியை ஆராயும்போது பால்வீதியின் நடுவில் செறிவுமிக்க X கதிர் வருவதைக் கொண்டு கருந்துளைகள் இருப்பதைக் கண்டறிந்தார். இதனை மற்ற விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டனர்.

இதுவரை பிரபஞ்சத்தில் 10000 ல் 1 பங்கு பகுதியை கருந்துளைகள் விழுங்கி விட்டன, இந்நிலை தொடர்ந்து நடைபெற்றால் ஒரு நாள் பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருட்களும் கருந்துளைகளால் அழிக்கப்பட்டுவிடும்.

Tuesday, July 26, 2011

எரிநட்சத்திரங்கள்

இரவு வானத்தில் இயற்கை வானவேடிக்கை காட்டுபவை எரிநட்சத்திரங்கள் (Meteors). வானிலிருந்து பூமி நோக்கி பாயும் விண்கற்களுக்கும் இந்த எரிநட்சத்திரங்களுக்கும் நிறையவே வித்தியாசம். இரண்டும் வேறு வேறானவை.

வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றும், அதை தூமகேது (Comets)என்று அழைப்பர். வால் நமது சூரிய குடும்பத்துக்கு உட்பட்ட ஓர் ஒளிரும் வாயு. சரியாக சொல்லப்போனால் அது சூரியனைச் சுற்றியுள்ள ஒரு சுற்றுப்பாதையில் பாய்ந்து செல்லும் ஒளிரும் வாயுக்களாலான ஒரு பொருள். அதனுடைய சுற்றுப்பாதை சூரியன் அருகிலிருந்து ஆரம்பித்து மிகத்தொலைவிலுள்ள கிரகத்தையும் தாண்டி வான வெளியில் பில்லியன் கணக்கான மைல்கள் தொலைவுக்கு நீண்டு அமைந்திருக்கும். எனினும் அவ்வளவு தொலைவுக்குச் செல்லும் தூமகேது, பல ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ மீண்டும் வழியைக்கண்டுபிடித்து வந்து சூரியனைச் சுற்றிவிட்டு செல்கிறது.

இந்த தூமகேதுக்கள் அழியும்போது மிஞ்சுபவைதான் விண் கொள்ளிகள். ஒரு தூமகேது மடியும் போது அது விண்கொள்ளிகளின் கூட்டமாக மாறிவிடுகிறது.

விண் கொள்ளிகள் இரவு பகலாக பூமி மீது பொழிந்தபடி உள்ளன. எனினும் பகல் நேரத்தில் அவற்றைக் காணமுடியாது. ஒவ்வோர் 24 மணி நேரத்திலும் பூமி மீது ஐந்து முதல் பத்து மில்லியன் விண்கொள்ளிகள் விழுகின்றன. ஒவ்வொரு விண்கொள்ளிகளும் ஒரு குண்டூசியின் தலை அளவுக்கே உள்ளது.

பூமியிலிருந்து அவை சுமார் அறுபது மைல் உயரத்தில் இருக்கும்போது நமக்கு விண்கொள்ளிகள் தெரிகின்றன. மாபெரும் வேகத்தில் வரும் அவை,காற்றின் மீது பயங்கர ஆற்றலுடன் மோதுகின்றன, அப்படி மோதும் போது தீப்பிடித்து நிலத்தில் வந்து விழுவதற்கு முன்னரே அழிந்து விடுகின்றன.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் பூமி எதிர்ப்படும் பெர்ஸ்யுஸ் மண்டல விண்கொள்ளித் திரள் (Presides) போன்றதொரு பெரிய விண்கொள்ளித் திரளின் ஊடே பூமி கடந்து செல்லும் போது நாம் விண்கொள்ளிகளை எளிதில் காணலாம்.




நட்சத்திரம்

இரவு வானத்தில் சிறு புள்ளிகளாக மின்னுபவை நட்சத்திரங்கள் (Stars) அல்லது விண்மீன்கள் எனப்படுகின்றன. சில நட்சத்திரங்கள் (விண்மீன்கள்) சூரியனின் அளவில் ஐந்தில் ஒரு பகுதியே இருக்கின்றன. ஆனால், சில நம் சூரியனைவிட 1000 மடங்கு பெரிதாக இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் உண்டு. பெரிய நட்சத்திரங்களுக்கு குறுகிய ஆயுளும், சிறிய நட்சத்திரங்களுக்கு நீண்ட ஆயுளும் உள்ளன. அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நட்சத்திரங்கள் ஹைட்ரஜனால் உருவானவை. ஒரு பெரிய விளையாட்டு மைதானம் அளவு ஹைட்ரஜனை அழுத்தி ஒரு கிரிக்கெட் பந்து அளவிற்கு ஆக்கினால் எப்படி இருக்குமோ, அதுதான் ஒரு நட்சத்திரம். நட்சத்திரத்தில் இருக்கும் ஹைட்ரஜன் ஒன்றின் மீது மற்றொன்று இணைந்து ஹீலியம் ஆகிறது. ஹீலியம் ஒன்றில் ஒன்று இணைந்து கார்பன் ஆகிறது. கார்பனுக்கு பின் நியான், ஆக்ஸிஜன், சிலிகான் போன்றவை உருவாகின்றன. இறுதியில் இரும்பு உருவாகிறது. அப்போது நட்சத்திரம் இறக்கும் தருவாயை அடைகிறது.

Sunday, July 24, 2011

உருகுதே உருகுதே புவி....

புவிப் பந்தின் உள்பகுதி உருகத்தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் ஓட்டை ஆகியவற்றால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், புவியின் உள்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செபாஸ்டியன் ரோஸ் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.

ஆராய்ச்சியில் தெரியவந்த தகவல்கள்: சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி, புவியின் ஆழ் மய்ய பகுதியும் உருகத்தொடங்கி உள்ளது. புவியின் இயக்கத்துக்கு தேவையான மின்காந்த அலைகள் இப்பகுதியில் இருந்துதான் கிடைக்கிறது. இதன் விட்டம் சுமார் 2,400 அடி. நிலா அளவுக்கு பெரிதானது.

இது மிக மிக கடினமானது. இப்பகுதியை சுற்றி வெளிப்புறம் இரும்பு, நிக்கல், அலாய் உள்ளிட்ட பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுள்ள, பிரகாசமான போர்வை போன்ற உலோகக்கலவை திரவ நிலையில் உள்ளது. இயல்பு நிலை பாதிக்கப்படாமல் இப்பகுதியில் கன்வெக்ஷன் முறையில் வெப்பம், மற்றும் குளிர்தல் நிகழ்வு மாறிமாறி நடைபெறும்.

சீரான கன்வெக்ஷன் புவி சுழற்சியை பாதிக்காது. இடர்பாடுகளால் கன்வெக்ஷன் முறையில் ஏற்படும் பாதிப்பு இப்பகுதியில் வெப்பத்தை அதிகரித்து பாதிப்படையச்செய்யும். இதனால் அங்கிருந்து வரும் மின்காந்த அலைகள் பாதிக்கப்பட்டு புவி சுழற்சி உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே இந்த பாதிப்பை சரிசெய்ய முடியும்.

விண்மீன்களின் பரிணாம வளர்ச்சி.....

மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் எப்படி பிறப்பு, வாழக்கை மற்றும் இறப்பு என்று ஒரு பரிணாமம் உள்ளதோ, அதே போல விண் மீன்களுக்கும் கூட ஒரு பரிணாம வளர்ச்சி உள்ளது. இதை விண்மீனின் பரிணாம வளர்ச்சி என்கின்றனர். இந்த பரிணாம வளர்ச்சியின் இறுதி கட்டங்களில் தான் ஒரு விண்மீன் சிவப்பு பெருஉருவாக மாறுகிறது.

ஒரு விண்மீனின் மய்யப் பகுதியில் நடைபெறும் அணுக்கரு வினைகள் என்பவை தான் விண்மீனின் ஆற்றலுக்குக் காரணம். அதாவது ஹைட்ரஜனின் அணுக்கருக்கள் இணைந்து ஹீலியமாக மாறுகின்றன.

இந்த ஹீலியம் மெதுவாக விண்மீனின் மய்யப்பகுதியில் அப்படியே சேகரமாகி, ஒரு ஹீலியம் மய்யப்பகுதியை உருவாக்குகிறது. ஹீலியம் மய்யப்பகுதியில் சேகரமாகும் போது அதனைச் சுற்றியுள்ள வெளி சுற்றுப் பரப்பில் ஹைட்ரஜன் இணைவு வினைகள் நடக்கின்றன.

காலப்போக்கில் இந்த மய்யப்பகுதி மிகவும் கனமானதாகவும், மிகவும் அழுத்தமானதாகவும் மாறுகிறது. (ஹீலியம் என்பது ஹைட்ரஜனை விடவும் கனமானதாகும்) மையப் பகுதியின் அழுத்தமும் கனமும் அதன் வெப்ப நிலையை முன்பு இருந்ததை விடவும் அதிகமாக மாற்றுகின்றன.

காலப்போக்கில் ஹீலியம் அணுக்கருவே இணைந்து மற்ற கணமான தனிம அணுக்களை உருவாக்குமளவுக்கு விண்மீனின் மய்யப்பகுதியில் வெப்பநிலையும் அழுத்தமும் அதிகமாகிறது.

ஹீலியம் அணுக்கருக்கள் கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற கனமான அணுக்களாக இணையும் போது அபரிமிதமான வெப்ப ஆற்றல் விண்மீனினி மையப்பகுதியில் உருவாக்குகிறது.

இந்த ஹீலிய இணைவு வினைகளால் வெளிப்படும் வெப்ப ஆற்றல் விண்மீனின் சுயஈர்ப்பு விசையை சமநிலைப்படுத்தத் தேவையான ஆற்றலை விட மிகவும் அதிகமாக உள்ளதால், விண்மீன் மெதுவாக விரிவடையத் தொடங்குகிறது.

Saturday, July 23, 2011

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணம்: 30 வருட விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது


அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அமெரிக்காவின் விண் ஓடத் திட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த விண் ஒடங்கள் மனிதர்கள் பூமி குறித்தும் பிரபஞ்சம் குறித்தும் வைத்திருந்த புரிதல்களை மாற்றியதாக அட்லாண்டிஸ் கமாண்டர் கிரஸ் பெர்குசன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மொத்தம் ஐந்து விண்வெளி ஓடங்கள் தயாரிக்கப்பட்டன. இவை நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களையும் ஹப்பில் தொலைநோக்கியையும் ஏவ உதவின.
அமெரிக்காவில் மொத்தம் ஐந்து விண்வெளி ஓடங்கள் தயாரிக்கப்பட்டன. இவை நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களையும் ஹப்பில் தொலைநோக்கியையும் ஏவ உதவின.
முதல் முதலாக அமெரிக்க 1983 ஆம் ஆண்டு சேலன்சர் என்ற விண்வெளி ஓடத்தை ஏவியது. அதுவரை விண்வெளி வீரர்களும் - செயற்கைக்கோள்களும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டனர். விண்வெளி ஓடத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு.

கல்பனா சாவ்லா

இதுவரை விண்வெளி ஓடங்கள் மூலமாக 135 விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதேநேரம் விண்வெளியில் இரண்டு விண்வெளி ஓடங்கள் வெடித்துச் சிதறியதால், இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.

மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட 5 விண்வெளி ஓடங்களில் மற்ற இரண்டு ஏற்கனவே அருங்காட்சியகங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. அட்லாண்டிஸ் விண்கலமும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.

மேலும் இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் 4 ஆயிரம் ஊழியர்கள் பதவியிழப்பார்கள்.

அதேநேரம் விண்வெளி ஓடத்துக்கு ஓய்வு கொடுக்கப்படுவதால் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி தடைபடாது என்று நாசா உறுதி கூறுகிறது.

ஆனால் அமெரிக்காவில் தனியார் துறையினரால் செய்யப்படும் ராக்கெட்டுகள் பயன்பாட்டுக்கு வரும் வரை ரஷ்யாவின் சோயஸ் ராக்கெட்டுக்கள் மூலமாகவே அமெரிக்காவின் விண்வெளிப் பயணங்கள் நடைபெறும்.


வான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

வான்வெளிப் பகுதியில் மிகச் சிறிய கிரகமான ப்ளூட்டோ உள்ளது. இந்த கிரகத்தை சுற்றி உள்ள வளையங்கள் குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த சிறிய கிரகத்தை சுற்றி புதிய கிரகம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். ஹப்ளே விண்வெளி நுண்ணோக்கியின் மூலம் இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு பி4 என்ற பெயரை நிபுணர்கள் தற்காலிகமாக சூட்டி உள்ளனர். இந்த சிறிய கோள் நான்காவது கண்டுபிடிப்பாகவும் மிகச்சிறிய வடிவம் கொண்டதாகவும் உள்ளது. இது ப்ளூட்டோவின் நான்காவது துணைக் கிரகம் ஆகும்.

இந்த புதிய கிரகம் 13 முதல் 34 கிலோ மீற்றர் அகலம் கொண்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 1043 கிலோமீற்றர் குறுக்களவு கொண்டது.

ப்ளூட்டோவின் மிகப்பெரிய துணைக் கிரகமாக சாரோன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, July 22, 2011

பூமியில் 330 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் தோற்றம்

மண்ணுக்குள் இருந்து விலங்கு கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களில் ஆய்வை மாசா சு செட் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எரிக் ஆலம் மற்றும் லாரன்ஸ் டேவிட் தலைமை யிலான குழுவினர் மேற் கொண்டனர். அதிலிருந்து மரபணு மூலக் கூறுகளை எடுத்து பூமியில் உயிரினங்கள் எப்போது தோன்றின என ஆராய்ச்சி செய்தனர். அதன் படி 280 கோடி முதல் 330 கோடி ஆண்டுகளுக்கு இடையே உயிரினங்கள் தோன்றியிருக்ககூடும். அப்போது தற்போதுள்ள 27 சதவிகித மரபணுக் குடும்பங்கள் உருவாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். உயிரி ரசாயன முறை ஏற்பட்டு உயிரியல் பணி நடைபெற சூரிய ஒளிசக்தி முக்கியப் பங்கு வகுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

Thursday, July 21, 2011

அணு, அனல் மின்சாரத்துக்கு மாற்றாக வானில் இருந்து மின் வினியோகம்

ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் நடந்த விபத்து போல எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க, விண்வெளியில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை, செயற்கைகோள் மூலமாக பூமியின் எந்த பகுதிக்கும் வினியோகம் செய்ய முடியும் என விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்ட போது புகுஷிமா நகரில் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அணுமின் நிலையத்தின் ஜெனெரேட்டர்கள் பாதிப்படைந்ததால், அணு உலையை குளிர்விக்க முடியவில்லை. இதனால் அணு உலை வெப்பமடைந்து அணுகதிர் வீச்சை ஏற்படுத்தியது. மின் தடை காரணமாக ஏற்பட்ட இந்த பிரச்சினையை சமாளிக்கும் வழி குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற விஞ்ஞானிகள் ஜான் கே. ஸ்ட்ரிக்லேண்ட் மற்றும் ப்ளூம் கூறியதாவது: விண்வெளியில் சூரிய வெளிச்சம் 24 மணி நேரமும் இருக்கும், பூமயில் நிலவும் சூரியனின் வெப்பநிலையைவிட, விண்வெளியில் 7 மடங்கு அதிகமாக இருக்கும். சோலார் தகடுகளை பயன்படுத்தி அங்கு எளிதில் மின் உற்பத்தி செய்யலாம்.

அந்த மின்சாரத்தை மைக்ரோ வேவ் ஒளிக்கற்றையாகவோ, அல்லது லேசர் லைட் ஒளிக்கற்றையாகவோ மாற்றி ரிசீவர் மூலமாக பூமியின் எந்த பகுதிக்கும் அவசர நிலையாக வினியோகம் செய்ய முடியும். இதற்கு பிரத்யேக செயற்கைகோள் மற்றும் ரிசீவர் தேவை. ஒரு செயற்கைகோள் ஆசியாவின் பெரும் பகுதிக்கு மின் வினியோகம் செய்துவிடும். மூன்று செயற்கை கோள்களை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் எந்த பகுதிக்கும் மின் வினியோகம் செய்யலாம். எந்த பகுதிக்கு மின்சாரம் தேவையோ, அங்கு 5 முதல் 20 டன் எடையுள்ள ரிசீவர் கருவியை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அதை 50 முதல் 100 அடி அகலமுள்ள திறந்தவெளி இடத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் ஒரு மெகா வாட்டுக்கு அதிகமான மின்சாரத்தை விண் ணிலிருந்து அவசரநிலை வினியோகம் செய்யலாம். இதனால் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 6 மணி நேரத்துக்குள் மின் சப்ளை கொடுக்க முடியும். நடைமுறையில் உள்ள நிலக்கரி மின்சாரம், அணு மின்சாரத்துக்கு மாற்றாக விண்வெளி சூரிய சக்தி மின்சக்தி உற்பத்தி செய்யலாம். ஆனால் சோலார் தகடுகளையும், செயற்கைகோளையும் விண்ணுக்கு அனுப்பும் செலவு மிக அதிகமாக இருக்கும். - இவ்வாறு அமெரிக்க விஞ்ஞானிகள் கூறினர்.

புவியில் மோதும் கற்களால் பாதிக்கும் நாடுகள்!

விண்வெளியில் உள்ள சிறுகோள்கள் புவியில் மோதினால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக வல்லுநர்கள் இப்பட்டியலை வெளி யிட்டுள்ளனர்.

இப்பட்டியலில் குறிப்பிடப் பட்டுள்ள நாடுகள் மிகுந்த அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், பிலிபைன்ஸ், இத்தாலி, பிரிட்டன், பிரேசில், நைஜிரியா ஆகிய நாடுகள் இந்த சிறு கோள்களின் தாக்குதலுக்கு உள்ளானால் அங்கு மிகுந்த உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதினால் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றிலும் அழிவுக்கு உள்ளாகும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றாக அழிந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Wednesday, July 20, 2011

மார்பக புற்றுநோயை தடுக்கிறது சூரியஒளி!!


தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது பட்டால், மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சூரிய ஒளி நம்மீது படும்போது, வைட்டமின் டி உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை, ஒருவித ஹார்மோனோக மாற்றும் திறன் பெற்றவை.

இந்த ஹார்மோன்தான், மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம், நடுத்தர, வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது படும்படி பார்த்துக்கொண்டால், மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபடலாம். ஆண்களை பொறுத்தவரை, வைட்டமின் டி மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.

அமாவாசை நாளில் சந்திரன் ஏன் தெரிவதில்லை?

தினமும் வரும் நிலா அமாவாசையில் மட்டும் ஏன் தெரிவதில்லை? காரணம், சந்திரன் தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வர 29 1/2 நாட்கள் ஆகுது. அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்ற...இதே 29 1/2நாட்கள்தான் ஆகுது.

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வர 24 மணி நேரம் ஆகுது. அது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்ற 365 1/4 நாட்கள் ஆகுது.

இப்படியே சந்திரன் பூமியைச் சுற்ற, பூமி சூரியனைச் சுற்ற... இப்படியே ஒன்றுக்கொன்று மாறி மாறி சுற்றி வருவதால்தான் மாதத்தில் ஒருநாள் நாம் சந்திரனையே பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அமாவாசை தினத்தன்று சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து விடும். அப்போது புவியை நோக்கி இருக்கும் சந்திரனின் மேற்பரப்பில் சூரிய ஒளி விழுவதில்லை. அதனால் தான் அமாவாசைக்கு மட்டும் சந்திரன் நம் கண்ணுக்கே தெரிவதில்லை.


Tuesday, July 19, 2011

நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக் குழுவில் மீண்டுமொரு இந்தியப்பெண்

பஞ்சாபை சேர்ந்த ஐஸ்தீப் கவுர் என்ற பெண் நாசாவின் செவ்வாய்கிரக விண்வெளி ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய்கிரகத்தை பற்றி ஆராய்ச்சி நடத்துவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளது.

அக்குழுவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண்ணான ஜஸ்தீப் கவுர் (27) என்பவர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இவர் விண்வெளி யில் ஆராயும் குழுவினரின் உடல் நிலையை கண்காணிக்கும் பணி யில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் தந்தை ஹர்பஜன்சிங். ஹோமியோபதி மருத்துவர்.தாய் ரவீந்தர் கவுர் இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். பல் மருத்துவராக பணிபுரிந்து வரும் ஜஸ்தீப் கவுர் தனது பள்ளிக்கல்வியை மங்களூரில் முடித்தார்.

அப்போது பல் சம்பந்தமாக அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய போட்டியில் இவர் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மருத்துவ கல்வியை லூதியானாவில் முடித்தார்.

அதனைதொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் இரண்டு பட்ட மேற்படிப்புகளை முடித் துள்ளார். தற்போது விண்வெளி வீரர்களின் பல் மற்றும் அவர்களின் தாடை சம்பந்தமான துறையில் ஆராய்ச் சியை மேற்கொண்ட வருகிறார்.

இவரின் ஆராய்ச்சி குறித்து ஐரோப்பிய விண்வெளி நாசாவுக்கு பரிந்துரைத் துள்ளது. அதனடிப்படையில் பல்வேறு நேர்முகத்தேர்வு மற்றும் பரிசோதனைக்கு பின்னர் விண்வெளி செல்லும் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜஸ் தீப் கவுர் மூன்றுக்கும் மேற்பட்ட மருத்துவ சம்பந்தமான புத்தகங்களை எழுதியுள்ளார். சர்வதேச பல் ஆய்வு அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.

ஜஸ்தீப் விண் வெளிக்கு தேர்ந்தெடுத்தது குறித்து அவரின் பெற்றோர் குறிப்பிடுகையில் ஜஸ்தீப் கவுரின் கனவு நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சியில் இதே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மறைந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கல்பனா சாவ்லா இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க
து

வெகு விரைவில் வேற்றுகிரக பிரவேசம்

பூமியில் உயிர் வாழ்வதுபோலவே விண்ணிலும் மனிதர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வது சாத்தியமே. அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள். மனிதன் உயிர் வாழ தேவையான சூழ்நிலை விண்ணில் பெருமளவில் உள்ளதால் இத்தகைய முயற்சி விரைவில் சாத்தியமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் டேனியல் கிளாவின் தலைமையில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் விண்ணில் மனிதன் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு: பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை, அமினோஆசிட் என்ற ஒரு வகை அமிலத்தால் சாத்தியமாகிறது.

விண்ணில் உள்ள சில கிரகங்களிலும் இத்தகைய அமிலம் இருப்பதற்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. மனித உயிருக்கு தேவைப்படும் அமினோ ஆசிட்டில் லெப்ட் மற்றும் ரைட் ஹேண்டட் என 2 வகைகள் உள்ளன. இதில் லெப்ட் ஹேண்டட் அமினோ ஆசிட்தான் இயற்கையில் அதிகம் உள்ளது. மனிதனுக்கு அத்தியாவசியமானதும் இதுவே.

2009 ல் க்ரீன் பெல்ட் பகுதியில் இயங்கி வரும் நாசாவின் காடார்ட் ஸ்பேஸ் ப்ளைட் மையம், விண்கற்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது. இதில், கார்பன் அதிகம் கொண்ட லெப்ட் ஹேண்டட் அமினோ அமிலங்கள் பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், விண்ணில் அமினோ அமிலங்கள் அதிக அளவில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கற்களில் எல்-ஐசோவேலைன் என்ற மூலப்பொருளின் கலப்பும் உள்ளதால் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. விண்கற்கள் மற்றும் எரிநட்சத்திரங்கள் மூலம் பூமியில் இருந்து விண்ணுக்கும் அங்கிருந்து பூமிக்கும் அமினோஆசிட் பரிமாற்றம் சாத்தியமாகி இருக்க வேண்டும்.

தற்போதைய எரிகற்களை பண்டைய எரிகற்களுடன் ஒப்பிட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவற்றில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யும் எல்-ஐசோவேலைன் மூலப்பொருள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சூரிய வெப்பத்தை அடிப்படையாக கொண்டே லெப்ட் ஹேன்டட் அமினோ அமிலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இத்தகைய சூழலில் ரைட் ஹேண்டட் அமினோ அமில வகைகள் தானாக அழிந்து விடும்.

விண்ணில் லெப்ட் ஹேன்டட் அமினோ அமிலங்கள் மட்டுமே அதிக அளவில் இருப்பதால் சூரிய ஒளி இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக உள்ளது. தண்ணீர், சூரிய ஒளி எல்லாம் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், விண்ணில் மனிதன் குடியேறும் சூழ்நிலை தென்படுகிறது.

கிரகங்களை கண்டறிய டெலஸ்கோப்

சூரிய குடும்பத்தில் இடம் பெறாத 300—--க்கும் மேற்பட்ட கிரகங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஏற்கனவே கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் பூமியைப் போன்ற புதிய கிரகம் ஏதாவது இருக்கிறதா என்று கண்டறிய நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக கெப்ளர் என்ற டெலஸ்கோப் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் விமானப்படை நிலையத்தில் இருந்து ஆளில்லாத ராக்கெட்டில் இது அனுப்பி வைக்கப்பட்டது. இது நட்சத்திர கூட்டமான பால்வீதி மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டு புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும்.

Monday, July 18, 2011

தொலைநோக்கி, நுண்நோக்கி பிறந்த கதை!

தூரத்தில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவும் டெலஸ்கோப், 1608-ல் ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற டச்சுக்காரரால் உருவாக்கப்பட்டது. 1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலைநோக்கிகளும், பைனாகுலர்களும் இதன் வழி வந்தன.

18-ம் நூற்றாண்டில், கண்ணாடி அணிவதற்குப் பதில் சிறிய தொலைநோக்கியைச் சிலர் தூக்கித் திரிந்தனர். நுண்ணிய பொருளை பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ரோஸ்கோப்) டச்சு கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென் 1590-ல் கண்டுபிடித்தார்.

கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க மைக்ரோஸ்கோப் போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டின் மத்தியில், டச்சு நாட்டுக் கண்ணாடிப் பொருள் தயாரிப்பாளரான அண்டன் லீவென்குக், மைக்ரோஸ்கோப்பில் பாக்டீரியாவையே பார்க்கும் அளவுக்கு மேம்படுத்தினார்.

ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார். இதே காலகட்டத்தில், பிரிட்டடிஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக் “மைக்ரோகிராபியா” என்ற நூலை வெளியிட்டார்.

அதில் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதன்பின் மைக்ரோஸ்கோப் பிரபலமானது. நுண்ணுயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதே முக்கியமான காரணம்.

விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!

ஹூஸ்டன்: விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது பழைய செயற்கைக் கோள் ஒன்றின் சிதைந்த பாகங்கள் மோதும் ஆபத்து நிலவியதால் பரபரப்பு நிலவியது. ஆனால், இந்த மோதலுக்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவி்ட்டதால் விஞ்ஞானிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி ஓடமான அட்லாண்டிஸ் வெள்ளிக்கிழமை சென்றது. விண் நிலையத்தை உருவாக்குவதற்கான பாகங்களை 12வது முறையாக அட்லாண்டிஸ் எடுத்துச் சென்றுள்ளது.

மேலும் விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவு, தண்ணீரையும் அட்லாண்டிஸ் கொண்டு சென்றது. இந்நிலையில், 1970ம் ஆண்டு செலுத்தப்பட்டு இப்போது செயலிழந்து விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் சோவியத் யூனியனின் செயற்கைக்கோளின் ஒரு சிதைந்த பாகம், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி வந்து கொண்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா கூறியது.

இந்த பாகங்கள் மோதினால் விண் நிலையம் மற்றும் அதில் இணைந்துள்ள அட்லாண்டிஸ் ஓடம் ஆகியவற்றுக்கு பெரும் சேதம் ஏற்படும் என்பதால், அதிலுள்ள விண்வெளி வீரர்களை அட்லாண்டிஸ் மூலம் உடனடியாக பூமிக்குத் திரும்ப அழைப்பது குறித்தும் அல்லது விண்வெளி மையத்தையே சிறிது தூரத்துக்கு இடம் நகர்த்தவும் நாஸா திட்டமிட்டு வந்தது.

இந் நிலையில், செயற்கைக் கோளில் பாகங்களின் சுற்றுப் பாதை மாறிவிட்டதால் அவை விண்வெளி மையத்தின் மோத வாய்ப்பில்லை என்று நாஸா இப்போது அறிவித்துள்ளது. விண்வெளி மையத்தில் பழுதடைந்துள்ள ஒரு பம்ப்பை சரி செய்ய வீரர்கள் இன்று விண்வெளியில் நடக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர மேலும் சில சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக அட்லாண்டிஸ் விண்கலத்தின் பயண நாள் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் 13 நாட்களுக்குப் பின் ஜூலை 21ம் தேதி பூமிக்குத் திரும்ப இருந்தது அட்லாண்டிஸ். விண்வெளி மையத்தில் இப்போது அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள் உள்ளனர்.

இந்த மையத்தின் பாகங்கள், ஷட்டில் ரக விண்கலங்கள் மூலம் ஒவ்வொன்றாக பூமியிலிருந்து பல முறை எடுத்துச் செல்லப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. 1998ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணி 2012ம் ஆண்டில் நிறைவடையவுள்ளது. ஷட்டில் ரக விண்கலங்களில் கடைசியாக இயக்கப்படும் ஓடம் அட்லாண்டிஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்துடன் அட்லாண்டிஸ் கலமும் தரையிறக்கப்படவுள்ளது. இதையடுத்து வேறு ரக விண்கலங்களை நாஸா பயன்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, July 15, 2011

வெகு விரைவில் இந்தப் பூமி அழிவைச் சந்தித்துவிடும் என்று சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

நாம் வாழுகின்ற இந்தப் பூமி ஒரு பாரிய அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது என்று சில விண்வெளி ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
பூமியின் கடைசிக் காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்று, கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்கள் பைபிளை ஆதாரமாகக் கொண்டு தீர்க்கதரிசனம் உரைத்து
வருகின்றார்கள்.

பூமி அழிகின்றதோ இல்லையோ ஆனால் ஒரு பெரிய ஆபத்தை அண்மைக்காலங்களில் சந்திக்கப்போவது உறுதி என்று ஒரு சில விஞ்ஞாணிகள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.

நாம் வாழுகின்ற இந்தப் பூமி அழியப் போகின்றதா? நாம் அளவுக்கு அதிகமாக நேசிக்கின்ற, நாம் நீண்ட காலம் வாழத் துடிக்கின்ற, நாம் எமக்கானதாக மாற்றிக்கொள்ள விரும்புகின்ற, எமது சந்ததிகள், பரம்பரைகள் வாழவேண்டும், ஆழவேண்டும் என்று நாம் விரும்புகின்ற இந்தப் பூமி அழிந்துவிடப்போகின்றதா?

நாம் வாழுகின்ற இந்தப் பூமியை ஒரு ஆபத்து நெருங்கின்றதா? இந்தப் பூமி அழிந்துவிடப்; போகின்றதா? எப்படியான அழிவை இந்தப் பூமி எதிர்கொள்ளுகின்றது?

மனிதர்களால், அவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞாணத்தால் இந்த அழிவைத் தடுத்து நிறுத்த முடியுமா? இன்று பூமியிலுள்ள பலரிடம் இருக்கின்ற மிகப் பொரிய கேள்விக்கான விடையினைத் தேட முனைகின்றது உண்மையின் தரிசணம்.

ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் இந்த ஆண்டு இறுதியில் தனது முதல் சுற்றை நிறைவு செய்கிறது. சூரிய குடும்பத்தின் 8-வது கோளாக நெப்டியூன் உள்ளது. இந்த கோள் 1846-ம் ஆண்டில் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.

நீல நிறத்தை கொண்ட இந்த கோள், சூரியனின் நீல் வட்டப்பாதையில் அதிக தொலைவில் அமைந்துள்ளது. பூமி உள்ளிட்ட மாற்ற கோள்களைப் போலவே, நெப்டியூன் கோளும் சூரியனை சுற்றி வருகிறது. இந்த கோள் கண்டு பிடிக்கப்பட்டது முதல் இதன் சுழற்சியை விஞ்ஞானிகள் கண்காணித்து கணக்கிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு கோளும், தொடக்க புள்ளியில் இருந்து சூரியனை சுற்றி அதே புள்ளியை வந்தடைய குறிப்பிட்ட காலங்களை எடுத்துக் கொள்ளும். பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் நெப்டியூன் கண்டு பிடிக்கப்பட்டதில் இருந்து, இன்னும் முதல் சுற்றையே பூர்த்தி செய்யவில்லை.

வருகிற டிசம்பருக்குள் தனது முதல் சுற்றை நெப்டியூன் பூர்த்தி செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அப்படி நிறைவு செய்யும் பட்சத்தில் சூரியனை ஒருமுறை சுற்றிவர இந்த கோளுக்கு 1,168 ஆண்டுகள் பிடித்துள்ளது உறுதிப்படுத்தப்படும்.

இந்த கோள் 1846-ல் ஜூலை 13-ம் தேதி, இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இதன் கண்டு பிடிப்பு தினம்,
ஜூலை 13-ம் தேதி, உலகம் முழுவதும் கொண்டாடபட்டது .

Friday, July 8, 2011

பூமியின் பருமன் நாளுக்கு நாள் அதிகரிப்பு



நாம் வாழும் பூமியின் பருமன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலக தொழிற்சாலைகளில் வெளியேறும் கரியமில வாயுக்களால் வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்த வெப்ப அதிகரிப்பால் பூமியின் வட துருவம் மற்றும் தென் துருவத்தில் ஆண்டுக்கு 38 ஆயிரத்து 200 கோடி டன் பனிக்கட்டி உருகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பனிக்கட்டி உருகலால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஐஸ் யுகத்திற்கு பின்னர் பூமி மிகுந்த அளவு எடை குறைந்து காணப்பட்டது. இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பூமியின் மையப்பகுதி உலக வெப்பம் அதிகரிப்பால் பெருத்து உள்ளது. அண்டார்டிகாவிலும், கிறீன்லாந்திலும் ஐஸ் உருகி ஓடுவது தொடர்கிறது.

ஐஸ் கட்டி காலத்தின் போது பூமியின் எடை பருமன் ஆண்டுக்கு ஒரு மில்லி மீற்றருக்கும் குறைவான அளவில் இருந்து வந்தது. ஐஸ் கட்டியின் அடுக்குகள் கடுமையானதாக இருந்த போது பூமியின் மேல் பகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

கிரேஸ் எனப்படும் புவி ஈர்ப்பு மீட்பு சோதனை செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் பூமியில் பனிக்கட்டி உருகுவது அதிகரித்து பூமியின் வடிவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிந்தது.

Sunday, July 3, 2011

பிரபஞ்சத்தில் உயிரைத் தேடி.........


மின்சாரம் தடைப்படுகிற இரவு நேரம்; மொட்டை மாடியில் நின்று கவனித்தால் நமக்குமுன் எல்லையற்ற விரிந்து பரந்துள்ள பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்கள் அற்புதமானது. சப்தரிசி மண்டலம், ஓரியன் மண்டலம், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம், வெண்பனி போன்ற "ஆகாயகங்கை" என்று அழைக்கப்படுகிற மில்கிவே என கண்கொள்ளா காட்சி. நமக்கு முன் உள்ள இந்த வெளியில் உயிர்களைத் தேடுவோம்.
நீண்ட நெடுங்காலமாகவே வானவியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு `பிரபஞ்சத் தனிமையில்' இந்த உலகம் இருக்கிறதா என்ற கேள்வி ஏற்பட்டது. இந்த பரந்த பிரபஞ்சத்தை ஆராயவும், தெரிந்து கொள்ளவும் நாம் மட்டுமே முயற்சி செய்கிறோமா, நமக்கு துணையாக வேறு கிரகவாசிகள் இல்லையா என்ற ஆதங்கம் இருக்கிறது.
பிரபஞ்சத் தனிமை ஒரு பக்கம் இருந்தாலும், உயிர் தேடலில் மற்றொரு விசயமும்அடங்கியுள்ளது. கொஞ்சம்,கொஞ்சமாகபூமிக்குவயது ஆகிக்கொண்டே போகிறது. அதோடு நாமும் பூமியை ஒரு கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றிவிட்டோம். இதனால் பூமி மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் மனித இனம் தளைக்க வேறு ஒரு இடம்(கிரகம்) வேண்டுமே.
இது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய விஞ்ஞானிகள் செயற்கைகோள்களையும், `கலீலியோ' போன்ற வானில் மிதந்த கொண்டே ஆராய்கிற டெலஸ்கோப்புகள், பூமியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான டெலஸ்கோப்புகளை கொண்டு இந்த பிரபஞ்சத்தை துருவித்துருவி ஆராந்து கொண்டிருக்கிறார்கள்.உயிர்களைத் தேடுவதற்கு முன்னால் உயிர் என்பது என்ன என தெரிந்துகொள்வோம். 'புரதப்பொருட்களின் புதிர் வடிவமே உயிர்' என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவை போக இன்னும் சில நிபந்தனைகளும் உண்டு.
1. டி.என்.ஏ (டி ஆக்ஸிரிபே நியூக்ளீக் அமிலம்), ஆர்.என்.ஏ (ரீபோ நியூக்ளீக் அமிலம் கொண்டதாக இருக்க வேண்டும்
2. இனப்பெருக்கம், உறுப்பசைவு, நகர்தல் இருக்கவேண்டும்.
3.ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுதல் அடையவேண்டும்(பரிணாமம்)
4.வளர்ச்சிதைமாற்றம்.
5.வேதிமாற்றம் போன்ற செயல்பாடுகள் இருக்கவேண்டும்.
உயிர் என்றால் என்ன எனப் பார்த்தாயிற்று.
உயிர் உருவாக என்ன மாதிரியான சூழ்நிலைகள் வேண்டும். ஒரு கிரகத்தின் சூழ்நிலையை மாற்ற இயலாதவை, மாற்றக்கூடியவை என இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒரு கிரகம் சூரியனில் இருந்து உள்ள தொலைவு, சுழற்சி வேகம்,நாள் சலனம், ஆண்டு சலனம், சுழற்ச்சி ஆச்சின் சரிவு, நிறை, ஆரம், சுற்றும் பாதை இவை மாற்ற இயலாதவை. மாற்றகூடிய சூழ்நிலைகள் என சில உண்டு. மனிதனின் விஞ்ஞான முயற்சியால் ஒரு கிரகத்தின் வளிமண்டலம், வளிமகலவை, அழுத்தம், தட்பவெப்பம், ஈரப்பதம் இவற்றை மாற்றலாம்.
இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நமது சூரியமண்டலத்தில் உயிர் வாழத் தகுதியான, அல்லது ஏதேனும் புதிய உயிர்கள் வாழ்கின்றதா எனத் தேடுவோம்.
வேற்று கிரகங்களில் உயிர்தேடல் என பேச ஆரம்பித்தாலே நமக்கு முதலில் தோன்றுவது செவ்வாய் கிரகமாகத்தான் இருக்கும். நமது சூரியமண்டலத்தில் பூமியை அடுத்த நான்காவது கிரகமாகும். கிட்டதட்ட பூமியின் பரப்பளவு கொண்டது. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 1/2 மணிநேரம் ஆகிறது. சூரியனை சுற்ற இரண்டு வருடங்கள் (பூமி வருடங்களில்). தைமாஸ், போபாஸ் என இரண்டு சந்திரன்கள். தைமாஸ் 16 கிமீ சுற்றளவு, போபாஸ் 28 கிமீ. சுற்றளவு கொண்டது. தைமாஸ் செவ்வாயை கிழக்கிலிருந்து மேற்காகவும், போபாஸ் மேற்கிலிருந்து கிழக்காகவும் சுற்றுகின்றன. செவ்வாயின் மேற்பரப்பு இயக்கமற்று காணப்பட்டாலும் எரிமலை வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்கின்றன. செவ்வாயின் அதிகாலைப் பொழுது பூமியின் காலை பொழுதைப்போலவே மெல்லிய பனிப்படலத்துடனேயே துவங்கிறது. மிக மெல்லிய காற்றுமண்டலம் அதில் குறைந்த அளவில் ஆக்ஸிஸன், கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஜன் உள்ளது. ஒரு காலத்தில் ஆறுகள் ஒடி வற்றிப்போன கிரகமாக செவ்வாய் காட்சியளிக்கிறது. பாத்பைன்டர் ஆய்வுகள் செவ்வாயின் மையப்பகுதியல் செய்யப்பட்டது. துருவப்பகுதியில் நீர் பனிகட்டியாக இருக்கிறது. பாக்டிரீயாக்கள் போன்ற சிறு உயிரினங்கள் இருக்கலாம். தற்பொழுது உயிர் இருக்கிறதோ இல்லையோ எதிர்காலத்தில் நமது சந்ததியினர் வாழ ஏற்ற கிரகம்.

செவ்வாய்க்கு அடுத்தாக சனிகிரகத்தின் சந்திரனான டைட்டன். கி.பி.1655ல் கிருஸ்டியன் ஹூயுஜென்னால் கண்டுபிடிக்கபட்ட்து. 400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்ததோ அதே போன்ற தன்மையில் இருக்கிறது. சனிகிரகத்திலிருந்து 12,22,000 கி.மீ. துரத்தில் உள்ளது. 180 டிகிரியில் தண்ணீர் உறைந்திருக்கிறது. அந்த கிரகம் முழுவதும் மீத்தேனும், ஈத்தேனும் நிறைந்தருக்கிறது. இக்கிரகம் உயிர்வாழ தகுதியானதாக மாற 400 கோடி ஆண்டுகளாகலாம். காத்திருப்போம்!!

சூரிய மண்டலத்தில் மற்றொரு நம்பிக்கை தரும் கிரகமாக வியாழன் கிரகத்தின் யூரோப்பா. வியாழன் கிரகம் மற்றொரு சூரியமண்டலத்தை போலவே 20க்கும் மேற்பட்ட சந்திரன்களுடன் திகழ்கிறது. வியாழனின் காந்தப்புலனும், ஈர்ப்புவிசையும் சூரியனின் ஆற்றலில் பாதியைப் பெற்றுள்ளது. யுரோப்பாவின் மேற்பரப்பில் 10 கி.மீ. அழத்தில் தண்ணீர் உள்ளது என்றும், அதன் வளிமண்டல அழுத்தம், வாயுகள், தட்பவெப்பநிலை, சுழற்சிவேகம் போன்றவை டைட்டனைப் போலவே எதிர்கால நம்பிக்கையளிக்கக் கூடியது.

எதிர்காலத் தேவை விண்வெளி ஆய்வின் அடுத்த கட்ட வளர்ச்சி என்ற அடிப்படையில் சூரியமண்டலத்தில் உயிர் தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சூரியமண்டலத்திற்கு வெளியேயான உயிர்த் தேடல் விஞ்ஞானிகள் உட்பட அறிவியல் ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது. இதன் வெளிப்பாடாகவே பறக்கும் தட்டு கதைகள். பறக்கும் தட்டுகள் உண்மையில்லை என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா உறுதிசெய்துள்ளது. ஆனால் கென்னத் ஆர்னால்டு என்பவர் "மூன்றடி வெள்ளி மனிதர்கள்" என்ற நூலை வெளியிட்டு பலகோடி டாலர்கள் சம்பதித்தார். ஹர்பெர்ட்ஜார்ஜ் எழுதிய "உலகங்களுக்கிடையே போர்" போன்ற நாவல்களும், மென்இன்பிளாக், மார்ஸ்ஆட்டாக், அவதார் போன்ற திரைப்படங்களும் வந்துள்ளன.
நாம் வாழும் பிரபஞ்சம் மிகப் பிரமாண்டமான பிரபஞ்சத்தின் ஒருபகுதியே. இதில் உயிர்களைத் தேடுவது அசாத்தியமான பணியாகும். பல சமன்பாடுகள், டெலஸ்கோப்புகள், ஒளியுணர்கருவிகள், டிஸ்ஆண்டனாக்கள், செயற்கைகோள்கள் மூலமாக விண்வெளியில் பிற கிரகவாசிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகவாசிகள் நிச்சயமாய் இருப்பார்கள் என்கிறார் பிராங்டிரேக் என்ற விஞ்ஞானி. அவரின் கணிப்புப்படி நம் சூரியன் அங்கம் வகிக்கும் ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் 60 கோடி கிரகங்களில் உயிர் வசிக்கலாம். அதிலும் சிலநூறு கிரகங்களில் வளர்ச்சியடைந்த உயிர்கள் வசிக்கலாம் என்கிறார். இந்த முடிவை ஒருசமன்பாட்டின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
N=n.p1,p2,p3,p4ti/t
N-வெளியுலக சமுக எண்ணிக்கை, n- பால்வெளிமண்டல நட்ச்சத்திரங்களின் எண்ணிக்கை, p1-நட்சத்திரங்களை சுற்றி கிரகங்கள் இருப்பதற்கான நிகழ்தகவு, p2-கிரகத்தில் உயிர் தோன்றுவதற்கான் நிகழ்தகவு, p3-நூண்ணிய பரிணாம வளர்ச்சிக்கான நிகழ்தகவு, p4-நூண்தொழில் சகாப்த நிகழ்தகவு, t1- தொழில் கலை சகாப்த நிகழ்தகவு, T- பால்வெளிமண்டலத்தின் வயதுடன் ஒப்பிடக்கூடிய கால அளவு.
இந்த சமன்பாட்டை வைத்து கொண்டு ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் தேட ஆரம்பித்தால் தேடிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.

இதுபோன்ற விண்வெளி மனிதர்களைத் தேடுவதற்கு 'சேதி'(SETI) என்று பெயர்.(SETI- search for terrestial intelligen). 1974 நவம்பர் 16ல் நமது சூரியனுக்கு ஓர் ஓளியாண்டு தூரத்தில் உள்ள சீரிஸ் நட்சத்திரத்திற்கு மின் அலைகள் மூலம் விண்வெளி மனிதர்களுக்கான முதல் செய்தி அனுப்பப்பட்டது. இதில் ஒரு சிக்கல் உள்ளது. நாம் அனுப்புகிற செய்தி சரியான நட்சத்திரத்திற்கு போய்ச் சேருமா? சந்தேகம் தான். ஏன் என்றால் பிரபஞ்ச வெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒரு மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் செய்தி அனுப்பிய நட்சத்திரம் ஓர் ஒளியாண்டு தூரத்தில் (ஒரு நொடியில் ஒளிசெல்லும் வேகம் 1 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர்) இருப்பதாக வைத்துக் கொண்டால் நாம் பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளியானது ஓர் ஆண்டுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒளியாகும். இந்த சூழ்நிலையில் நாம் செய்தி அனுப்புவதோ, பெறுவதோ மிகமிக சிரமமான பணியாகும்.வேறு என்ன தான் வழி?. விண்வெளி மனிதர்கள் செய்தி அனுப்பினால் பெறுவதற்காக 1985 முதல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மாபெரும் அலைதிரட்டி செயல்பட்டு வருகிறது. இதைப்போன்று ஒளி சமிக்ஞை மூலம் செய்தி அனுப்பினால் ஒரு நொடியில் நூற்றில் ஒருபங்கு நேரத்தில் ஏற்படும் மாறுதல்களை பதிவு செய்ய ஒளிவாங்கி அமைத்து கண்காணிக்கிறார்கள். ஆனால் இதுவரை நாம் சந்தோசப்படும்படியாக எந்த செய்தியும் வரவில்லை.
மற்ற நட்சத்திரங்ளை சுற்றி வருகிற கிரகங்களைக் கண்டுபிடித்திருந்தாலும் கூட ஒரு கிரகத்தில் உயிர் தோன்றி நிலைத்து பரிணாம வளர்ச்சியடைவது சாதாரண விசயம் அல்ல. பூமி தோன்றி 400 கோடி ஆண்டுகளில் 150 கோடி ஆண்டுகளாகத்தான் உயிர்த் தோற்றமும், அதிலும் சில லட்சம் ஆண்டுகளாகத்தான் மனிதப் பரிணாமமும் ஏற்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் நமது ஆகாய கங்கையில் மட்டுமே 1 அல்லது 2 கிரகங்களில் அறிவுஜீவி உயிர்கள் வாழ்வது சாத்தியமே என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிறகு ஏன் அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள மறுக்கிறார்கள்? சில விஞ்ஞானிகள் சொல்வதைப்போல நம் பூமியில் இருக்கும் விலங்குகள், தாவரங்கள், பூச்சிகளுக்கு இடையே ஏற்படும் மிகநுட்பமான தகவல் பரிமாற்றத்தைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது பிறகிரகவாசிகள் அனுப்பும் செய்திகளை நாம் எப்படி புரிந்து கொள்ளமுடியும் என்கிறார்கள்.
யாதார்த்தமாகப் பார்த்தால் இது வரை பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்களோ, வேற்றுகிரகவாசிகளோ இல்லை. அரிதிலும் அரிதாக பூமியில் உயிர்கள் அதிலும் தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய மனிதர்கள். பிறகு ஏன் நம்மை நாம் அழித்துக்கொள்ள அணு ஆயுதங்கள் எதற்கு? மனிதன் மனிதன் சுரண்டுவது எதற்கு? நாடு, இனம், மதம் என்ற பாகுபாடு எதற்கு? பூமியைப் பாதுகாப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்.